துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை, 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களில் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை. இரண்டு தொடர்களிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைக் குவித்தது. ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது. இரண்டு தொடர்களிலும் பந்துவீச்சாளர்களைத் தவிர பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

அதேபோலவே, இந்த முறையும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒன்று, இரண்டு பந்துவீச்சாளர்களைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. தற்போது துபாய் மைதானத்தில் தான் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் ஆட உள்ளது.
இந்த நிலையில், முதல் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மிஸ்டரி ஸ்பின்னர் என அறியப்படும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.
அடுத்து, வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை நீக்கிவிட்டு அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது, வலது கை மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்க வேண்டும் என்பதுதான். முகமது ஷமி வலது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் நிலையில், அவருடன் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தால் பாகிஸ்தான் அணியைக் கட்டுப்படுத்தலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது.
ஹர்ஷித் ராணா விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது சிக்கலாக உள்ளது. குறிப்பாக கடைசி ஓவர்களில் அவரை பௌலிங் செய்ய வைப்பது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஹர்திக் பாண்டியாவிற்கு அதிக ஓவர்களைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. எனவே, ஹர்ஷித் ராணா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நீக்கப்படலாம். அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படக் கூடும்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரை, ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதல் எட்டு இடங்களில் பேட்டிங் செய்வார்கள். இவர்களில் அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் செயல்படுவார்கள். இவர்களைத் தவிர்த்து முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய உத்தேச பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.