கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரக் கூடாது என்றும், ஹைபிரிட் மாடலிலேயே அதனை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா கூறியுள்ளார். இந்திய அணி வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதால், ஐசிசி ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இதற்கான முதற்கட்ட அட்டவணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் லாகூர் மைதானத்தில் நடத்தப்படும் என்று தெரிய வந்தது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு பயணித்து இந்தியா அணி விளையாடுமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஏனென்றால் 2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி ஒருமுறை கூட பாகிஸ்தான் சென்று இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் ஆசியக் கோப்பை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பிசிசிஐ தரப்பில் முயற்சிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது.
அதற்கேற்ப ஐசிசி கொடுத்துள்ள நிதியும், ஹைபிரிட் மாடலில் நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா பேசுகையில், பாகிஸ்தான் உள்ள சூழலை பார்க்கும் போது, இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு பயணிக்க கூடாது. இதனை பாகிஸ்தான் அரசும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
அதேபோல் ஹைபிரிட் மாடலில் நடத்தவே ஐசிசி முடிவு செய்யும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக இந்திய அணி போட்டிகள் துபாயில் நடக்கும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். அதன்பின் 2வது விஷயம் வீரர்களுக்கான மரியாதை. இன்னும் சில விஷயங்களும் பட்டியலில் சேரும்.
என்னை பொறுத்தவரை பிசிசிஐ இந்த விவகாரத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனக்கு தெரிந்த வரை, சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலிலேயே நடக்கும். அதனை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரும் பட்சத்தில், அதிகப்படியான பணம் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கிடைக்கும்.
ஸ்பான்சர்ஷிப், தொலைக்காட்சி உரிமம் உள்ளிட்டவை நிச்சயம் உயர்த்தப்படும். இதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும், பாகிஸ்தானிலும் உள்ள பிரச்சனைகளை சரி செய்யாமல் அழைப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரரே இப்படி பேசியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே ஐசிசி தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்கவுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த போதே, பாகிஸ்தான் நடத்திய ஆசியக் கோப்பை தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்துவதில் ஜெய் ஷா குறியாக இருந்தார். இதனால் இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்கு மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டிய சூழலும் இருப்பதால், கடைசி நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட்டால், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.