சென்னை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவரும், முன்னாள் வீரருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாகிஸ்தான் அணியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இனி இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பரம எதிரிகளின் மோதல் என்று அழைப்பதையே நிறுத்த வேண்டும் என்றும், இந்தியாவின் மூன்றாம் கட்ட அணியே பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திவிடும் என்றும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரிய பில்ட்-அப் கொடுக்கிறார்கள். ஆனால் களத்தில் நடப்பதோ ஒருபக்க ஆட்டம். பாகிஸ்தான் அணியிடம் இந்தியாவுக்குப் போட்டியளிக்கும் அளவுக்குத் தரமான வீரர்கள் இப்போது இல்லை" என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் தரம் குறைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிரடியான கருத்தைப் பதிவு செய்தார். "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் முக்கிய அணி இவர்களுக்குத் தேவையே இல்லை. இந்தியாவின் நான்காவது லெவன் அல்லது 'சி' அணியை அனுப்பினாலே போதும். அவர்கள் பாகிஸ்தானை அடித்துத் துவம்சம் செய்துவிட்டு வருவார்கள்." என்றார்.
பாகிஸ்தான் பந்துவீச்சு குறித்துப் பேசிய அவர், "ஒரு காலத்தில் இம்ரான் கான், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் இருந்த அணி இது. ஆனால் ஷாகின் அப்ரிடி மீதான பயம் எல்லாம் போய்விட்டது. அவரது பந்துவீச்சில் எந்தத் தாக்கமும் இல்லை" என்று சாடினார்.
பேட்டிங் வரிசையை விமர்சித்த ஸ்ரீகாந்த், "இன்று பாபர் அசாம் தான் உங்கள் முக்கிய டி20 வீரர் என்றால், நீங்கள் டி20 கிரிக்கெட் விளையாடுவதையே விட்டுவிடலாம். நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான பாகிஸ்தான் பேட்டிங் வரிசை இதுதான்" என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த முடிவையும் ஸ்ரீகாந்த் சாடினார். அந்த ஆடுகளத்தில் முதலில் பந்துவீசியது முட்டாள்தனமான முடிவு என்றும், அப்போதே பாதி போட்டி முடிந்துவிட்டது என்றும் அவர் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.