மும்பை: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான அணிகள் பிரிப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேற வேண்டும் என்பதற்காகவே, பலவீனமான அணிகளுடன் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் இவர்களுடன் நமீபியா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. இது குறித்துப் பேசிய கவாஸ்கர், ஐசிசியின் இந்த முடிவை விமர்சித்துள்ளார்.

"சமீபத்திய உலகக்கோப்பைகளில் நடப்பது போலவே இம்முறையும் நடந்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் அவர்களை ஒரே பிரிவில் வைக்கவில்லை. மாறாக, இந்த இரண்டு அணிகளும் எவ்வித சிரமமும் இன்றி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற வேண்டும் என்பதற்காகவே, மிகவும் எளிதான பிரிவில் இவர்களை வைத்துள்ளனர்" என்று கவாஸ்கர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து எழுதியுள்ள அவர், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்தச் சிறிய அணிகளை எளிதாக வீழ்த்திவிடும். எனவே, உலகக்கோப்பையின் உண்மையான விறுவிறுப்பான போட்டிகள் லீக் சுற்றுக்குப் பிறகு, அடுத்த சுற்றில்தான் தொடங்கும்" என்று கணித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு ஒரு எச்சரிக்கையையும் கவாஸ்கர் விடுத்துள்ளார். காகிதத்தில் வேண்டுமானால் பாகிஸ்தான் அணி வலுவாகத் தெரியலாம். ஆனால், கடந்த 2024 உலகக்கோப்பையில் என்ன நடந்தது என்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
"கடந்த உலகக்கோப்பையில் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை நாம் பார்த்தோம். மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) போன்ற தொடர்கள் மூலம் அமெரிக்க வீரர்கள் தற்போது அதிக அனுபவம் பெற்று வருகின்றனர். உலகின் தலைசிறந்த வீரர்களுடன் ஒரே அணியில் விளையாடுவதால், சிறிய அணி வீரர்களுக்குப் பெரிய அணிகளைப் பார்த்தால் ஏற்படும் பயம் போய்விட்டது. அவர்கள் தோல்விகளைக் கையாளவும், நெருக்கடியைச் சமாளிக்கவும் கற்றுக் கொண்டுள்ளனர். இது எந்தப் பல்கலைக்கழகத்திலும் கற்றுக்கொள்ள முடியாத பாடம். எனவே, அமெரிக்கா இம்முறையும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது" என்று கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் எளிதாக அடுத்த சுற்றுக்குச் சென்றுவிடும் என்றாலும், பாகிஸ்தானின் நிலையற்ற ஆட்டம் அந்த அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதே கவாஸ்கரின் கருத்தாக உள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் அணி 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்போமா? இல்லையா? என சொல்கிறோம் என நாடகம் நடத்தி வருகிறது.
வங்கதேச அணி இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, இந்தியாவுக்கு வர மறுத்ததை அடுத்து டி20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. வங்கதேசத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை புறக்கணிக்கப் போவதாக கூறி வருகிறது.
இந்தியா உடனான போட்டியில் இருந்து மட்டும் பாகிஸ்தான் விலகும் எனவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.