அகமதாபாத்: பாகிஸ்தான் அணி எதிரான போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி என்றாலும், அடுத்தடுத்து சவால்கள் காத்திருப்பதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 8வது முறையாக இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 86 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வென்று இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றி குறித்து ரோகித் சர்மா பேசுகையில், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்தவர்கள் பந்துவீச்சாளர்கள் தான். நிச்சயம் இந்த ஆடுகளம் 190 ரன்கள் சேர்க்கக் கூடியது அல்ல. பாகிஸ்தான் அணியினர் ஒரு கட்டத்தில் 280 ரன்கள் சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டது பெருமை அளிக்கிறது.
ஒரு கேப்டனாக எனது பொறுப்பும் களத்தில் முக்கியமானது. ஏனென்றால் இந்திய அணியில் 6 பவுலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் 6 பேராலும் நிச்சயம் விக்கெட்டை வீழ்த்த முடியும். ஆனால் எந்த இடத்தில் யார் சிறப்பாக செயல்பட முடியும், எப்படி அணுகுவது என்பது முக்கியம். யார் இந்த பணியை செய்ய கூடியவர்கள் என்பதை நான் சரியாக தேர்வு செய்ய வேண்டும். அனைத்து நாட்களிலும் எல்லோராலும் சிறப்பாக செயல்பட முடியாது. ஒவ்வொரு நாளும் வேறு வேறு வீரர்களின் நாளாக இருக்கும். ஷர்துல் தாக்கூருக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதற்கு அதுதான் காரணம்.
உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக எங்களுக்கு குழப்பங்கள் இல்லை. யார் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் குழப்பவில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துகொண்டோம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதால், பெரிதாக கொண்டாட தேவையில்லை. அதேபோல் சோகமடையவும் தேவையில்லை. அடுத்த இலக்கை நோக்கி நடக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு அணியும் தரமான அணிகள் என்று தெரிவித்துள்ளார்.