கொழும்பு : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் 4 சுற்று போட்டியின் போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி ரிசர்வ் நாளான இன்று நடக்கும் என கூறப்படுகிறது.
இது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் சுற்றில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டு இருந்தது. செப்டம்பர் மாதம் மழை அதிகம் பொழியும் இலங்கையில் ஆசிய கிரிக்கெட் தொடரை நடத்தியது ஏன்? என்ற கேள்வி அப்போதே எழுந்தது.

ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடரின் போது மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை ரசிகர்கள் காண முடியும் நிலையே தற்போது உள்ளது. ஆனால், அந்தப் போட்டிகளின் போதும் இப்படி மழை வந்து போட்டி தடைபட்டால் எப்படி? என ரசிகர்கள் அப்போதே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், மீண்டும் சூப்பர் 4 சுற்றின் போதும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் தடைபட்டது. இந்தப் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் அறிவித்து இருந்தாலும், ரிசர்வ் நாளான இன்றும் மழை பெய்யும் என கூறப்படுகிறது.

இதையடுத்து கடும் கோபம் கொண்ட ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். போட்டி மழையால் தடைபட்ட சில நிமிடங்களில் ட்விட்டரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷாவை விமர்சித்து பதிவுகள் இடவே அவர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான அவர்தான் இலங்கையில் போட்டிகளை நடத்த திட்டமிட்டது என்பதே ரசிகர்களின் கோபத்துக்கு காரணம். ரிசர்வ் நாளான இன்றும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் அது கிரிக்கெட் உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகும். கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான திட்டமிடல் என்ற அவப்பெயரையும் இந்த தொடர் பெற்று விடும்.