துபாய்: இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்திற்கு பிறகு கிரிக்கெட் களத்தில் இரு அணிகளும் மோதுகிறார்கள்.
இதனால் இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அணி வீரர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும்.

நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "வரும் ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய போட்டி காத்துக் கொண்டிருக்கிறது. இந்திய அணி வீரர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்."
"உங்களுடைய செயல்பாடுகளில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம். களத்திற்கு சென்று வெற்றி பெறுங்கள். மற்ற விஷயங்களை எல்லாம் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். உங்களுடைய பணியை நீங்கள் செய்யுங்கள். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இல்லாமல் இந்திய அணி எந்த தொடரில் களமிறங்குகிறது."
"மேலும் திறமை வாய்ந்த இளைஞர்கள் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் போட்டியை யார் எதிர்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை .ஒரு நாட்டுக்கு என சில கொள்கைகள் இருக்கும். அந்த கொள்கைப் படியே அனைத்து விஷயங்களும் நடக்கும்."
"நாடு இந்த போட்டி நடைபெற வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இது நடக்கட்டும்.
இல்லை வேண்டாம் என்று நினைத்தால் வேண்டாம். ஆனால் இது தொடர்பாக அரசு ஏற்கனவே தங்களது கொள்கை முடிவை அறிவித்துவிட்டது. இதனால் வீரர்கள் தங்களது பணியை செய்ய வேண்டும்" என்று கபில் தேவ் கூறியுள்ளார்.