துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
முதல் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், தற்போது மூன்று விக்கெட்டுகள் என விளையாடிய இரண்டு போட்டிகளில் மொத்தம் ஏழு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார். தற்போது உலகின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளராக உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் தங்களது அணியில் உள்ள நவாஸ் தான் உலகின் மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளர் என்று கூறியிருந்தார்.

அதற்கு தற்போது குல்தீப் தனது பேட்டியில் பதிலடி கொடுத்திருக்கின்றார். ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய குல்தீப், நான் என்னுடைய திட்டங்களை மிகவும் சிம்பிளாகத்தான் வைத்திருக்கின்றேன். மைதானத்கில் திட்டங்களை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.
பாகிஸ்தான் அணி எப்படி செயல்படுகிறார்களோ அதற்கு ஏற்றார் போல் பந்து வீசி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டேன். முதல் பந்து எப்போதுமே கடினமாக தான் இருக்கும். ஆனால் அதை விக்கெட் எடுக்கும் பந்தாக கூட பயன்படுத்தலாம். நாம் எவ்வாறு பந்து வீசுவோம் என்று பேட்ஸ்மேனுக்கு தெரியாததால் அந்த பந்தை விக்கெட் எடுக்கும் பந்தாகத்தான் நான் நினைப்பேன்.
அப்படி ஒரு மைண்ட் செட் இருந்தால் மட்டுமே களத்தில் ஜொலிக்க முடியும். பேட்ஸ்மன்களுக்கு எதிராக நாம் ஆதிக்கம் செலுத்த முடியும். நான் எப்போதுமே என்னை உலகின் தலைசிறந்த சுழற் பந்து வீச்சாளர் என்று நினைத்தது கிடையாது. என்னுடைய பந்துவீச்சில் நான் இன்னும் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன். நான் பல பந்துவீச்சு முயற்சிகளை செய்கின்றேன். அதில் நான் இன்னும் சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன் என குல்திப் யாதவ் தெரிவித்துள்ளார்.