லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நிறைவேறுமா என்ற சந்தேகம் நீடித்து வரும் நிலையில், பெரிய தம்பி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன், சின்னத்தம்பி வங்கதேச கிரிக்கெட் வாரியம் கை கோர்த்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவரும், பாகிஸ்தான் வாரியத் தலைவரும் இணைந்து ஐசிசி பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவுக்கு எதிராகப் புதிய கூட்டணி அமைத்து ஐசிசி தலைவர் ஜெய் ஷாவிடம் பேரம் பேச இவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காகத் தங்கள் நாட்டுப் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றக் கோரிய வங்கதேச அணி, ஐசிசியால் தொடரிலிருந்தே அதிரடியாக நீக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான், பாகிஸ்தான் அணி இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால் ஐசிசிக்கு வருவாய் ரீதியாகப் பெரும் இழப்பு ஏற்படும். எனவே, இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக ஐசிசி இன்று காணொளி காட்சி மூலம் அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் நேராகப் பாகிஸ்தான் விரைந்துள்ளார்.
அவர் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியை நேரில் சந்தித்துப் பேசுகிறார். பின்னர் இருவரும் இணைந்து இந்த அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஐசிசி மற்றும் ஜெய் ஷாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தாலும், அதிகாரப்பூர்வமாக ஐசிசிக்கு இன்னும் கடிதம் எழுதவில்லை. இதற்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவுடன் விளையாட வேண்டுமென்றால் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனப் பாகிஸ்தான் வாரியம் ஐசிசியிடம் பேரம் பேசவுள்ளது.
கூடுதல் நிதி: ஐசிசி வருவாயில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாகப் பாகிஸ்தானுக்கு 34.5 மில்லியன் டாலர் கிடைக்கிறது. இந்தத் தொகையை மேலும் அதிகப்படுத்தித் தர வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்கவுள்ளது.
இருதரப்புத் தொடர்: 2013ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்புத் தொடர்கள் நடைபெறுவதில்லை. அதை மீண்டும் தொடங்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைகுலுக்கல்: கடந்த ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து வருகின்றனர். விளையாட்டின் மாண்பைக் காக்க மீண்டும் கைகுலுக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே இந்தியாவுடன் விளையாடுவோம் என்று பாகிஸ்தான் வாரியம், வங்கதேசத்தின் ஆதரவுடன் ஜெய் ஷாவுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரத்தானால் தொடரை நடத்தும் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால், தயவுசெய்து போட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது என்று கூறிக்கொண்டே, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இன்றைய கூட்டத்தில் ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பாகிஸ்தான் பிடிவாதம் பிடித்தால், ஐசிசி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் சூழல் உருவாகும்.