அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்த கையுடன் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையை கட்டியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா சஃபீக் 20 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 36 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இமாம் உல் ஹக்கை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, அவருக்கு "பை-பை" சொல்லி அனுப்பி வைத்த சம்பவம் மரண மாஸாக அமைந்தது. இதன்பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் இணை கூட்டணி சேர்ந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை இருவரும் சிறப்பாக எதிர்கொண்டனர். இதனிடையே ஜடேஜா பந்துவீச்சில் ரிஸ்வான் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க, அதனை ரிவ்யூ செய்தார்.
அதில் நாக் அவுட்டாக முடிவு வந்தது. இதனைத் தொடர்ந்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் எல்பிடபிள்யூ ஆனார். அதனை இந்திய அணி தரப்பில் மேல்முறையீட்டு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதில் நடுவரின் முடிவே இறுதியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே இவர்கள் இருவரும் அடுத்தடுத்து சில பவுண்டரிகளை விளாசினர்.
இதனால் 18.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. அதன்பின் ரிஸ்வான் விரைந்து பவுண்டரிகளை விளாச, ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் கைகளில் இருந்து நழுவ தொடங்கியது. சிறப்பாக ஆடிய பாபர் அசாம், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி அரைசதம் அடித்தார். இந்திய மண்ணில் பாபர் அசாம் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும்.
இதனை உணர்ந்த ரோகித் சர்மா உடனடியாக பந்தை சிராஜ் கைகளில் கொடுத்தார். இதனை உணர்ந்து சிறப்பாக கட்டர்களை வீசிய சிராஜ், பாபர் அசாமை போல்ட்டாக்கி 50 ரன்களிலேயே பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதன் மூலம் இந்திய அணி தரமான கம்பேக்கை இந்தப் போட்டியில் நிகழ்த்தியுள்ளது. 30 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.