லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் அரசியல் தலையீடுகள் குறித்து முன்னாள் ஜாம்பவான் முகமது யூசுப் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி மற்றும் நிர்வாகத்தின் மீது முன்னாள் வீரர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முகமது யூசுப், "பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ள அரசியல் தலையீடுகள் மற்றும் தனிப்பட்ட சுயநலங்கள் அகற்றப்படும் வரை, நம்மால் பழையபடி ஒரு சிறந்த அணியாக மாற முடியாது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றின் மிக இருண்ட காலம். இதைப் பார்க்கும்போது என் இதயம் ரத்தம் சிந்துகிறது" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நிர்வாகத்தில் அமர்ந்துள்ள திறமையற்ற நபர்கள் உடனடியாகப் பதவியிலிருந்தும், அணியிலிருந்தும் நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் உருப்படும்" என்று ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
முகமது யூசுப் நேரடியாகப் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது இந்த விமர்சனம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியை நோக்கியே இருப்பதாகக் கருதப்படுகிறது. நக்வி பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக, வங்கதேச அணி விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக நக்வி அறிவித்திருந்தார். இதற்காகப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் ஆலோசனையும் நடத்தினார். கடைசியில் ஐசிசி தலையிட்டு சமாதானம் செய்தது.
இந்தத் தேவையற்ற அரசியல் நாடகங்கள் மற்றும் புறக்கணிப்பு மிரட்டல்கள்தான் வீரர்களின் கவனத்தைச் சிதறடித்து, இந்தியாவிடம் இப்படி ஒரு அவமானகரமான தோல்வியைச் சந்திக்கக் காரணமாக அமைந்தது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவிடம் பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. இதனால் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவது சிக்கலாகியுள்ளது. அடுத்த போட்டியில் நமீபியாவை வீழ்த்தினால் மட்டுமே, மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து அடுத்த சுற்று வாய்ப்பு அமையும் என்ற இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் உள்ளது.