மும்பை: பாகிஸ்தான் அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதும் கதறி அழுத சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு சீசனில் லீக் சுற்று சூப்பர் ஃபோர் என இரண்டு போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றது.
இந்த நிலையில் பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியை வெற்றி பெற்றது. 147 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது இருபது ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இந்தியா தடுமாறியதால் பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் அவர்களது நம்பிக்கையை திலக் வர்மா பொய்யாக்கினார். இது குறித்து வீடியோ ஒன்று வெளியிட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் கதறி அழுதார். இது குறித்து பேசியவர் இந்த போட்டியில் நாம் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவுக்கு ஒரு தட்டையில் வைத்து வெற்றியை கொடுத்து விட்டோம்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது நமக்கு மிகவும் நல்லது இறுதிப் போட்டியில் எப்போதுமே முதலில் பேட்டிங் செய்வதுதான் புத்திசாலித்தனம். முதலில் பெரிய ரன்களை இறுதிப்போட்டிக்கு குவித்தால் அதனை துரத்தும் போது நிச்சயம் கடும் அழுத்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும். அது மட்டுமில்லாமல் நாம் 113 ரன்கள் ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்தோம்.
தொடக்க வீரர்கள் நன்றாக செட்டாகி இருந்தனர். ஆனால் எப்படி 146 ரன்களுக்கு ஆட்டம் இழந்தோம் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.எனினும் 146 ரன்கள் என்பதும் அந்த ஆடுகளத்திற்கு ஒரு நல்ல இலக்காகவே இருந்தது. டி20 கிரிக்கெட்டில் 140- 150 ரன்கள் அடிக்கும் காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது.
திலக் வர்மாவை பாருங்கள் அவரைப் பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த இடத்தில் எந்த ஷாட்டை ஆட வேண்டும். களத்தில் எவ்வாறு பேட் செய்ய வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். நமது பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த இடத்தில் எப்படி ஷாட் ஆட வேண்டும் என்பதை தெரியாது என்று முகமது அமீர் குற்றம் சாட்டியிருந்தார்.