துபாய்: புலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக் கொண்டது என்று நமது ஊரில் பழமொழி கூறுவோம். அதற்கு ஏற்றார் போல் ஒரு சம்பவம் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்றிருக்கிறது. சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன? இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.
எனினும் இந்திய அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை எடுத்ததால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா வழக்கம் போல் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார். அபிஷேக் ஷர்மாவும் கில்லும் முதல் விக்கட்டுக்கு 15 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தனர். இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவை ரன் அவுட் செய்யும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
ஆனால் அதனை தோனி போல் ரன் அவுட் செய்கிறேன் என நினைத்துக் கொண்டு பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் செய்தது காமெடியில் போய் முடிந்தது. அபிஷேக் ஷர்மா க்ரீஸ்க்குள் வர முயற்சி செய்தார். அப்போது பந்தை வாங்கிய முகமது ஹாரிஸ் தோனியை போல் பின்னால் திரும்பிக்கொண்டு பந்தை எறிந்தார். ஆனால் பந்து ஸ்டெம்பில் படவில்லை.
இதனை அடுத்து கையாலே ஸ்டெம்பை அடித்து நடுவரிடம் அவுட் கேட்டார். ரிப்ளேவில் பார்க்கும் போது பந்து கையை விட்டு சென்ற பிறகுதான் முகமது ஹாரிஸ் வெறும் கையால் ஸ்டெம்பை அடித்து ரன் அவுட் செய்து இருக்கிறார் என்று மூன்றாம் நடுவர்கள் தெரிந்து கொண்டனர். இதை அடுத்து உடனடியாக அவருக்கு நாட் அவுட் வழங்கப்பட்டது.
சாதாரணமாக பந்தை பிடித்து ஸ்டெம்மை நோக்கி அடித்து இருந்தாலே அபிஷேக் ஷர்மா ரன் அவுட் ஆகி இருப்பார்.
ஆனால் தேவையில்லாமல் தோனி ஸ்டைலை பின்பற்றுகிறேன் என்று நினைத்துக் கொண்டு ஸ்டெம்பை பார்க்காமலேயே பந்தை பிடித்து அடிக்க முயற்சி செய்து கோட்டை விட்டார். இதன் மூலம் அபிஷேக்சர் மாவுக்கு மிகப்பெரிய லைப் கிடைத்தது..