கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில், போட்டி முடிவதற்கு முன்பே பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வி அவமானத்தை தவிர்க்க வேண்டி மைதானத்தை விட்டு ஓட்டம் பிடித்தார்.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது தோல்வி உறுதியானதும், விஐபி பகுதியில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி, போட்டியை முழுமையாகப் பார்க்காமல் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 175 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் குறைந்து, தோல்வி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த நக்வி, அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்த உலகக்கோப்பை போட்டியை நடத்த விடாமல் செய்ய மோஷின் நக்வி பல முயற்சிகளை மேற்கொண்டார். பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் உலகக்கோப்பையில் ஆட தங்கள் அணிக்கு அனுமதி மறுத்தது. அதன்பின் ஐசிசி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மோஷின் நக்வி. இது எல்லாமே நக்வியின் நாடகம் என அப்போது கடும் விமர்சனம் எழுந்தது.
ஒருவழியாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி நக்வியின் நாடகத்தை தாண்டி நடைபெற்றது. இந்த நிலையில், பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மைதானத்துக்குள் சென்று இந்தியாவை வீழ்த்தி விட்டோம் என பெருமை காட்ட வேண்டியே நக்வி இலங்கை வந்தார். ஆனால். நடந்ததோ வேறு. இந்தியா அடித்த அடியை பார்த்து அவர் பாதி போட்டியிலேயே வெளியே ஓடி விட்டார்.
பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ஊடகவியலாளர்கள், போட்டி முடியும் தருவாயில் விஐபி காலரிகள் காலியாக இருந்ததையும், நக்வி அங்கிருந்து கிளம்பியதையும் உறுதி செய்துள்ளனர். பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தபோது, ஆறுதல் சொல்லக் கூட வாரியத் தலைவர் அங்கு இல்லை என்பது அந்நாட்டு ரசிகர்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பரம எதிரியான இந்தியாவிடம் தோற்பது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எப்போதும் ஏமாற்றம் அளிக்கும் ஒன்று. இந்நிலையில், ஒரு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பவரே தோல்வியை எதிர்கொள்ளத் துணிவின்றி பாதியிலேயே சென்றது, அந்த அணிக்கு மேலும் ஒரு தலைகுனிவாக அமைந்துள்ளது. இது தொடர்பாக வாரியத் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், அணியின் இக்கட்டான நேரத்தில் உடன் இருக்காமல் நக்வி சென்றது பொறுப்பற்ற செயல் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வை்த்து வருகின்றனர்.