துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித் தள்ளியது. ஆனால், இந்த வெற்றியை விட, போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்கள் நடந்து கொண்ட விதம் தான் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த இந்திய அணியின் செயலுக்குப் பின்னால் உள்ள காரணத்தை, கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கியுள்ளார்.
இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து விட்டனர். இது பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், "விளையாட்டு உணர்வையும் தாண்டிய சில விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன" என்றார்.

இந்தப் போட்டியில் வெற்றிக்கு பின் களத்தில் இருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவும், சிவம் துபேவும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் நேராக வீரர்கள் அறைக்குத் திரும்பினர். பெவிலியனில் இருந்த மற்ற இந்திய வீரர்களும் இதையே பின்பற்றினர். பாகிஸ்தான் வீரர்கள் முதலில் திகைத்து நின்றாலும், தற்போதைய சூழல் இயல்பானது அல்ல என்பதைப் புரிந்துகொண்டனர்.
இந்தச் செயல் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதற்கான காரணத்தை விளக்கினார். பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காதது குறித்த கேள்விக்கு, சூர்யகுமார் யாதவ் மிகவும் தெளிவாகவும், கம்பீரமாகவும் பதிலளித்தார்.
"எங்கள் அரசும், பிசிசிஐயும் இந்த விஷயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருந்தன. நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம், அதற்கான சரியான பதிலடியைக் களத்தில் கொடுத்துள்ளோம். விளையாட்டு உணர்வையும் தாண்டிய சில விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன என்று நான் நினைக்கிறேன். இதை நான் ஏற்கனவே பரிசளிப்பு விழாவிலேயே கூறிவிட்டேன். பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும், அவர்களது குடும்பங்களுடனும் நாங்கள் உறுதியாகத் துணை நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்."
"மேலும், நான் சொன்னது போல, இந்த வெற்றியை 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்திய நமது துணிச்சல் மிக்க ராணுவப் படைகளுக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம். அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளிப்பதைப் போல, எங்களால் முடிந்தபோதெல்லாம், அவர்களைப் புன்னகைக்க வைக்கும் வாய்ப்புகளைக் களத்தில் ஏற்படுத்திக் கொடுப்போம்" என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.
முன்னதாக, இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானை, ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா முதல் இரண்டு ஓவர்களிலேயே 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தனர். அதன்பிறகு, குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் சுழல் வலையில் பாகிஸ்தான் பேட்டிங் வரிசை முற்றிலுமாகச் சரிந்தது.
இறுதியில் ஷஹீன் அஃப்ரிடி அடித்த 16 பந்துகளில் 33 ரன்கள், பாகிஸ்தான் 127 ரன்கள் என்ற ஓரளவுக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசி மிரட்டல் தொடக்கத்தைக் கொடுத்தார். பின்னர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் சிவம் துபே ஆகியோர் எளிதாக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.