துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் குரூப் சுற்றுப் போட்டி குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருக்கிறார். "ஒரு இந்திய வீரர் கூட பாகிஸ்தானுக்கு எதிராகவோ அல்லது இந்த ஆசிய கோப்பையிலோ விளையாட விரும்பவில்லை; அவர்கள் பிசிசிஐ-யின் கட்டாயத்தின் பேரிலேயே விளையாடுகிறார்கள்" என்று அவர் கூறி இருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், வெற்றி ரன்னை அடித்த பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவின் முகத்தில் பெரிய கொண்டாட்டமோ, உணர்ச்சியோ வெளிப்படவில்லை. ஒட்டுமொத்த அணியின் உடல் மொழியும், இது வெறும் போட்டியாக இல்லாமல், ஒரு கடமையாகவே பார்க்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தியது. போட்டிக்குப் பிறகு வீரர்கள் கைகுலுக்க மறுத்ததும், அவர்களின் மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்த நிலையில், 'ஸ்போர்ட்ஸ் தக்' ஊடகத்திடம் பேசிய சுரேஷ் ரெய்னா, இந்திய வீரர்கள் அறையின் உண்மையான மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளார். "எனக்கு ஒரு விஷயம் உறுதியாகத் தெரியும். நீங்கள் தனிப்பட்ட முறையில் வீரர்களிடம் கேட்டால், ஒருவர்கூட இந்த ஆசிய கோப்பையில் விளையாட விரும்பவில்லை. ஒருவகையில், அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள், ஏனெனில், பிசிசிஐ இந்த தொடரில் ஆட ஒப்புக்கொண்டுவிட்டது. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது வீரர்களிடம் தனிப்பட்ட கருத்தைக் கேட்டால், அவர்கள் 'வேண்டாம்' என்றுதான் சொல்லியிருப்பார்கள். அவர்களில் ஒருவர்கூட விளையாட விரும்பவில்லை," என்று ரெய்னா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உடனான போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததற்கான பின்னணி இதுதானா? விருப்பமில்லாத ஒரு போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாலேயே, இந்திய வீரர்கள் கைகுலுக்கலைத் தவிர்த்ததன் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சுரேஷ் ரெய்னா சொல்வது உண்மை என்றால் இந்திய அணியின் செயல், பாகிஸ்தானுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்தப் போட்டியை ஆட ஒப்புக் கொண்ட பிசிசிஐ-க்கு எதிரான ஒரு மெளன எதிர்ப்பாகவும் இருக்கலாம்.
இந்த கைகுலுக்கல் சர்ச்சை பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது. சோயிப் அக்தர் போன்ற முன்னாள் வீரர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, பரிசளிப்பு விழாவையே புறக்கணித்தார்.