2026 டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வியை தழுவியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கடும் விமர்சித்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தியதை பாராட்டியபோது, பத்ரிநாத் பாகிஸ்தானை கிண்டல் அடித்துள்ளார்.
இடது கை ஆட்டக்காரரான இஷான் கிஷன், 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் இந்தியாவை 20 ஓவர்களில் 175/7 என்ற வலுவான ஸ்கோரை எட்ட வைத்தார். பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வெறும் 78/7 என்று தடுமாறி, இறுதியில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 61 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது.

இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பத்ரிநாத், "அணியில் இல்லாத ஒரு வீரர், இவ்வளவு கடினமான ஆடுகளத்தில் இதுபோன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது நம்பமுடியாதது. மற்ற பேட்ஸ்மேன்களை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு சிறந்தவர் அவர். ஒரு கட்டத்தில், பாகிஸ்தான் அணி இஷான் கிஷனின் ஸ்கோரை கூட எட்டாது என்று நினைத்தேன். இது ஒரு அபாரமான திறமை," என்று குறிப்பிட்டார்.
இது 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும், இதன் மூலம் அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றனர். அதேசமயம், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து ஆறாவது டி20 போட்டியில் தோல்வியடைந்ததுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேற குரூப் சுற்றின் இறுதிப் போட்டியில் நமீபியாவை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவின் களத்தில் நடந்த கேப்டன்சியையும் சுப்பிரமணியம் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்தார். கொழும்பு ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தபோதிலும், பாகிஸ்தான் அணியால் ரன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியா வெறும் 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
"சல்மான் ஆகாவின் கேப்டன்சி படுமோசமாக இருந்தது. இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தபோது ஷதாப் கான் பந்துவீச வந்தார். கிஷன் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தபோது வேகப் பந்துவீச்சாளர்களையே தொடர்ந்து பந்துவீச வைத்தனர். முதல் 10 ஓவர்களில் இந்தியா ரன்களை குவித்துக்கொண்டிருந்தபோது உஸ்மான் தாரிக் பந்துவீசவே வரவில்லை. இந்த கேப்டன்சி பள்ளி மாணவர் அளவிலானது," என்று பத்ரிநாத் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
"இந்தியாவால் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாது என்று நினைத்து நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்திருப்பதாகத் தோன்றியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா சுழற்பந்துவீச்சுக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக செயல்படாமல் இருக்கலாம். ஆனால் டி20 போட்டிகளில் சுழற்பந்துவீச்சை எப்படி விளையாட வேண்டும் என்பதைக் காட்டினார்கள். பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் ஹைப் தந்தார்கள். உஸ்மான் தாரிக் பந்துவீச தாமதித்து வீசுவது ஒரு மாயை தான்," என்றார்.