துபாய்: இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் புலம்பி இருக்கிறார். தங்களின் சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பு இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், பாகிஸ்தான் அணியின் விதி தங்கள் கைகளில் இருந்திருக்க வேண்டும் என நொந்து போய் பேசி இருக்கிறார் முகமது ரிஸ்வான்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதலில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. அடுத்து இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வாழ்வா, சாவா? என்ற நிலையில் விளையாடியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நீடிக்க முடியும், அரை இறுதி செல்வதற்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான்.

இந்தப் போட்டிக்கு பின் பேசிய முகமது ரிஸ்வான், "எங்கள் அணியின் சாம்பியன்ஸ் டிராபி பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்று என்னால் சொல்ல முடியும். மற்ற போட்டிகளின் முடிவுகளை சார்ந்து நாங்கள் இருக்க விரும்பவில்லை. இன்னும் ஒரு போட்டி எங்களுக்கு மீதம் இருப்பதால் சிறிய நம்பிக்கை உள்ளது. ஆனால் ஒரு கேப்டனாக மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கடினமாக உள்ளது. அதை நான் விரும்பவில்லை. எங்கள் அணியின் விதி எங்கள் கைகளில் இருந்திருக்க வேண்டும்" என்று நொந்து போய் பேசினார்.
தற்போது பாகிஸ்தான் அணிக்கும் வங்கதேசம் அணிக்கும் எதிரான ஒரு குரூப் ஏ பிரிவு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. அதில் வெற்றி பெற்றாலும், வங்கதேச அணி நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். அதேபோல இந்திய அணியும் நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்ற சிக்கலான நிலை உள்ளது. எனவே, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லலாம்.
இந்திய அணி இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று இருப்பதால் அரை இறுதி வாய்ப்பை 90 சதவீதம் நெருங்கி விட்டது. அடுத்து நியூசிலாந்து அணி, வங்கதேசத்தை வீழ்த்தினால் இந்திய அணி உறுதியாக அரை இறுதி சென்று விடும்.