துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 12 வது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. கடைசியாக டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா, பாகிஸ்தான அணி இன்னும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்திய வீரர்கள் குறிப்பாக பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி எங்களிடமிருந்து வெற்றியை பறித்து சென்று விட்டார்கள். நாங்கள் இன்னும் கூடுதலாக 15 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்போம்.
எனினும் 171 ரன்கள் எடுத்தது ஒரு நல்ல இலக்கு தான். எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளர் வீசினால் சரியாக இருக்கும் என்ற யோசனை வைத்து நான் வீரர்களை பந்து வீச அழைத்தேன். எங்கள் அணியில் ஹரிஷ் ரவுப் மற்றும் பகீம் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்கள் அணி பவர் பிளேவில் சிறப்பாக செயல்பட்டார்கள்.
எனினும் பவர் பிளேவை எங்களை விட இந்தியா சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். எங்கள் அணியின் பவுலர்கள் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்தார்கள். அதை நாங்கள் மாற்ற வேண்டும் என நினைக்கின்றோம். இந்த போட்டியிலும் எங்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது.
பக்கர் சமான், ஃபர்கான் ஆகியோர் சிறப்பாக வந்து வீசினார்கள். இலங்கை அணிக்கு எதிரான அடுத்த போட்டியை நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சல்மான் ஆகா தெரிவித்துள்ளார். இதனிடையே, பாகிஸ்தான அணி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்று விட்டதால் அடுத்தது இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.