கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா யாரும் எதிர்பார்க்காத ஒரு மாஸ்டர் பிளானுடன் களமிறங்கினார். பவர்பிளேவில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பகுதி நேர சுழற் பந்துவீச்சாளரான சல்மான் ஆகா முதல் ஓவரை வீசி, இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி பெரும் அதிர்ச்சியளித்தார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணிக்கு, வழக்கமாக ஷாகின் ஷா அப்ரிடிதான் முதல் ஓவரை வீசுவார். ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கேப்டன் சல்மான் அலி ஆகா பந்தை கையில் எடுத்தார். சல்மான் அலி ஆகா சர்வதேச டி20 போட்டிகளில் பந்துவீச்சைத் தொடங்குவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நலக்குறைவிலிருந்து மீண்டு வந்துள்ள அபிஷேக் சர்மா, இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சல்மான் அலி ஆகா வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஓவரின் கடைசிப் பந்தை சல்மான் ஆகா ஸ்டம்பை நோக்கி நேராக வீசினார். அதை அபிஷேக் சர்மா புல் ஷாட் ஆட முயன்றார். ஆனால், பந்து பேட்டின் மேல் பகுதியில் பட்டு மிட்-ஆன் திசையில் நின்றுகொண்டிருந்த ஷாகின் ஷா அப்ரிடியிடம் எளிதான கேட்சாகச் சென்றது.
நான்கு பந்துகளைச் சந்தித்த அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகி வெளியேறினார். அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலும் டக் அவுட் ஆன அவர், இந்தத் தொடரில் இன்னும் தனது ரன் கணக்கைத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கெட்டை வீழ்த்திய உடனேயே சல்மான் அலி ஆகா தனது அணி வீரர்களில் ஒருவரை நோக்கிக் கையை நீட்டிக் காட்டினார். இதன் மூலம், இது தற்செயலாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல, மாறாக அணியில் உள்ள ஒருவரின் ஆலோசனையின் பேரில் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட ஒரு மாஸ்டர் பிளான் என்று வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
உலகக்கோப்பை போட்டியின் முதல் ஓவரிலேயே இந்தியாவின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியது. பாகிஸ்தானின் இந்தத் திடீர் வியூகம் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அபிஷேக் சென்றவுடன் இஷான் கிஷன் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.