மும்பை: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை ஞாயிற்றுகிழமை கொழும்பில் மோதுகின்றன. இப்போட்டியில் உலக நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா விளையாட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக, பிப்ரவரி 12 அன்று டெல்லியில் நடைபெற்ற நமீபியாவுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது லீக் போட்டியில் அபிஷேக் பங்கேற்கவில்லை.
கடந்த 2025 ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மா, தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், அவர்களுடைய பெற்றோர்கள் இலங்கை வந்துள்ளதால், அபிஷேக் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "அபிஷேக் சர்மா நாளை விளையாடுவார் என நம்புகிறேன். அவர் விரைந்து குணமடைய வேண்டும். நாங்கள் எப்போதுமே சிறந்த அணியை எதிர்த்து விளையாடவே விரும்புகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
அபிஷேக்கின் எதிர்பாராத விலகலால், நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அருண் ஜெட்லி மைதானத்தில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்கினார். அவர் வெறும் 8 பந்துகளில் 22 ரன்களை விளாசி அதிரடி காட்டினார். ஒருவேளை அபிஷேக் சர்மா முழுமையாகக் குணமடையவில்லை என்றால், கேரளாவைச் சேர்ந்த இந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மீண்டும் ஒருமுறை தொடக்க வீரராகக் களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா,"இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய வெற்றி புள்ளி விவரங்கள் சிறந்ததாக இல்லை. நடந்து முடிந்த வரலாற்றை மாற்ற முடியாது. ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம். சிறந்த அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம்"
இதே போன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையிலான கைகுலுக்குதல் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரில் இருந்தே இரு அணி வீரர்களும் கைகுலுக்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இந்திய வீரர்களுடன் டாஸ் போடும்போதும் அல்லது போட்டி முடிந்த பிறகும் கைகுலுக்குவது பற்றி சல்மான் ஆகாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு "நாளை பார்க்கலாம்," என்று 2 வார்த்தையில் பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "கிரிக்கெட் சரியான மனப்பான்மையுடன் விளையாடப்பட வேண்டும். எனது தனிப்பட்ட கருத்து முக்கியமில்லாவிட்டாலும், கிரிக்கெட் எப்போதும் எப்படி விளையாடப்பட வேண்டுமோ, அப்படித்தான் விளையாடப்பட வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியாவே முடிவு செய்ய வேண்டும்," என்று ஆகா தெரிவித்தார்.