கொழும்பு: டி20 உலக கோப்பை 2026 ஆம் ஆண்டு தொடரில் பாகிஸ்தான் அணி மீண்டும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவி இருக்கிறது இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8 முறை தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கம் போல் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பியது. 176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி வெறும் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா, இந்த போட்டியில் நாங்கள் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினோம். எங்கள் அணி வீரர்கள் இன்று சரியாக செயல்படவில்லை. நாங்கள் தீட்டிய திட்டத்தை சில பகுதிகளில் செயல்படுத்தாமல் தவறிவிட்டனர்.
அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கில் நாங்கள் சரியான தொடக்கத்தை பெறவில்லை. பவர் பிளேவில் மூன்று நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டால், இலக்கை துரத்துவது என்பது மிகவும் கடினமாக மாறிவிடும். முதல் இன்னிங்சிஸில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக தான் இருந்தது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது.
ஆனால் சூழலுக்கு ஏற்ப நாங்கள் பந்து வீசவுமில்லை, எங்களுடைய திறமைக்கு ஏற்ற வகையில் நாங்கள் பேட்டிங்கும் செய்யவில்லை. இது போன்ற போட்டிகளில் தோல்வியை தழுவிய பிறகு கட்டுக்கடங்காத கோபம் உணர்ச்சிகள் வெளிவரும். ஆனால் இதையெல்லாம் நாங்கள் சமாளித்து ஆக தான் வேண்டும்.
இது போன்ற போட்டிகளில் நாங்கள் அதிகமாகவே விளையாடிவிட்டோம். அதனால் கவலை இல்லை. இன்னும் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு போட்டி இருக்கின்றது. அதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டும். சூப்பர் 8 சுற்று முற்றிலும் மாறுபட்ட புதிய தொடர் ஆகும் என கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார்.