துபாய்: இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியில், பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான்-இன் சர்ச்சைக்குரிய அவுட், தற்போது பூதாகரமாகியுள்ளது. கள நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), தொலைக்காட்சி நடுவர் (TV Umpire) ருசிர பள்ளியகுருகே தவறான தீர்ப்பை வழங்கியதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளது.
இந்தப் போட்டியின் மூன்றாவது ஓவரில் இந்த விவாதம் வெடித்தது. ஹர்திக் பாண்டியா பந்து வீசிய அந்த ஓவரில், ஃபக்கர் ஜமான் பந்தை அடிக்க முயன்றார். பந்து எட்ஜ் ஆகி சென்றது. அதை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 'கேட்ச்' பிடித்தார். பந்து தரையில் பட்டதா இல்லையா என்ற சந்தேகத்தில், கள நடுவர்கள் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினர். அப்போது ஃபக்கர் ஜமான் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வந்தார்.

தொலைக்காட்சி நடுவர் ருசிர பள்ளியகுருகே, இரண்டு வெவ்வேறு கேமரா கோணங்களில் அந்த 'கேட்ச்'சை ஆய்வு செய்தார். ஒரு கோணத்தில், பந்து சஞ்சு சாம்சன்-இன் கையுறைக்கு முன்பாக தரையில் படுவது போலத் தெரிந்தது. இது ஃபக்கர் ஜமானுக்கு சாதகமாக இருந்தது. ஆனால், மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது, சாம்சன் பந்தை நேர்த்தியாகப் பிடித்தது போலக் காட்சியளித்தது.
இறுதியில், இரண்டாவது கோணத்தின் அடிப்படையில், ஃபக்கர் ஜமானுக்கு அவுட் என்று தீர்ப்பளித்தார். இந்த முடிவு, ஃபக்கர் ஜமானை மட்டுமல்லாது, பாகிஸ்தான் அணி மற்றும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களிலும் இந்தத் தீர்ப்பு குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் எழுந்தன.
இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, அந்தத் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இல்லை என்று நம்புவதாகத் தெரிவித்தார். "நடுவர்களும் தவறு செய்யலாம். ஆனால் எனக்கு, பந்து கீப்பரின் கையுறைக்கு முன்னால் தரையில் பட்டது போலத் தெரிந்தது. ஒருவேளை நான் தவறாகக் கூட இருக்கலாம். ஃபக்கர் ஜமான் பேட்டிங் செய்த விதத்தைப் பார்க்கும்போது, அவர் பவர்பிளேயில் தொடர்ந்து ஆடியிருந்தால், நாங்கள் இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்து 190 ரன்களை எட்டியிருப்போம். ஆனால், முடிவெடுப்பது நடுவர்களின் கையில் உள்ளது. பந்து தரையில் பட்டதாக நாங்கள் உணர்ந்தோம், ஆனாலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது" என்று சல்மான் ஆகா கூறினார்.
இந்தச் சர்ச்சைக்குரிய தீர்ப்பு போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் தரப்பு நம்புவதால், தற்போது விஷயம் ஐசிசி-யின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஐசிசி இந்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.