இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை அந்நாட்டு பார்லிமெண்டில் வைத்து அரசியல்வாதிகள் கிண்டல் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. ஆனால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியிடம் பரிதாபமாக தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, பின்னர் இந்திய அணியிடமும் தோல்வியை சந்தித்தது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் மூலம் 2007 உலகக்கோப்பைக்கு பின் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன், பாகிஸ்தான் அணியை அணி என்று கூட சொல்ல முடியாது. ஒவ்வொரு வீரர்களும் வெவ்வேறு திசையில் பயணிக்கின்றனர். கொஞ்சம் கூட ஒற்றுமையே கிடையாது என்று காட்டமாக தெரிவித்தார்.
இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை பதவியில் இருந்து விலக ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கொந்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலேயே கேப்டன் பாபர் அசாமை கிண்டல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் எம்பி அப்துல் காதர் படேல் பேசுகையில், நமது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு என்னவாகியது.
அமெரிக்காவிடம் தோல்வியடைகிறோம்.. இந்திய அணியிடம் தோல்வியடைகிறோம்.. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அவரின் சீனியர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் ரசிகர்களுக்காகவும், மக்களுக்காகவும் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒற்றுமையாக விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் பாபர் அசாமை முன்னாள் கேப்டன் இம்ரான் கானுடன் ஒப்பிட்டு பேசி, சில பேப்பர்களையும் கிழித்து வீசியுள்ளார். அந்த பேப்பரில் என்ன இருந்தது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேள்வி எழுப்பியது. அதற்கு அப்துல் காதர் படேல், அதில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.. என்னிடம் இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.