லாகூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை தொடர்ந்து மூன்று முறை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை 13 முறை வீழ்த்தி இந்திய அணி அசத்தியுள்ளது.
இந்திய அணி வீரர்களை களத்தில் சந்திக்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் தேவையில்லாத பேச்சுகளில் ஈடுபட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஏற்கனவே களத்தில் நடந்து கொண்ட முறைக்காக ஐசிசி போட்டியிலிருந்து 30 சதவீதம் ஊதியத்தை அபராதமாக செலுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது, பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருக்கிறார். கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவி விட்டோமே என்ற மனசாட்சி உறுத்தல் கொஞ்சம் கூட இல்லாத அப்ரார் அகமது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது தொகுப்பாளர் உங்களுக்கு குத்துச்சண்டை களத்தில் எந்த வீரரை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். எந்த வீரருக்கு எதிராக உங்களுக்கு அவ்வளவு கோபம் இருக்கிறது என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அப்ரார் அகமத், நான் ஷிகர் தவானை குத்துச்சண்டையில் எதிர்கொள்ள ஆசைப்படுகிறேன். அவரை முகத்திற்கு நேராக எதிர்கொண்டு குத்துவேன் என்று பதிலளித்துள்ளார்.
அப்ரார் அகமதின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் இதை ஒரு நகைச்சுவைக்காக தான் அப்ரார் அகமது பேசியிருக்கிறார் என்றும் ஷிகர் தவான் மீது அவருக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை என்றும் கூறுகின்றார். இந்த நிலையில் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த போது முதல் முறையாக ஷிகர் தவான் தான் பாகிஸ்தான் போட்டியை தான் புறக்கணிப்பதாக கூறி கருத்து வெளியிட்டார்.
அதன் பிறகு ஒவ்வொரு வீரராக விலகியது அடுத்து அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவத்திலிருந்து இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் களத்திலும் விளையாடக்கூடாது என்று பலரும் கூறி வந்தனர். இதற்கு ஷிகர் தவான் தான் காரணம் என பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஏற்கனவே சையது அபிரிடி ஷிகர் தவானை அழுகிய முட்டை என்று மறைமுகமாக சாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.