கராச்சி: பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாமுடன் செல்ஃபி எடுக்க ரசிகர் ஒருவர் முயன்றார். அப்போது அவரது கையை பாபர் அசாமின் தோளில் வைக்க முயற்சித்த போது, பாபர் அசாம் உடனே முகம் சுழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்து பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் உள்நாட்டு கிரிக்கெட் தொடரை நடத்தவும் இன்னொரு பக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.

சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் போட்டியில் ஒரு வெற்றியை கூட அந்த அணியால் பெற முடியவில்லை. 6 போட்டிகளை டிரா செய்துள்ள பாகிஸ்தான் அணி, 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 16 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சொதப்பி வருகிறார்.
16 இன்னிங்ஸ்களில் சுமார் 350 ரன்களை மட்டுமே பாபர் அசாம் சேர்த்திருந்ததால், அவரை பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்சியில் இருந்து பாபர் அசாமை நீக்கும் முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் வந்திருப்பதும் தெரிய வந்தது.
பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பை தொடருக்கான கேப்டன்களில் பாபர் அசாமின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் சாதாரண வீரராக விளையாடவுள்ளார். இதன் காரணமாக அடுத்த கேப்டனாக முகமது ரிஸ்வான் 3 வடிவங்களுக்கும் தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகின்றனர். இதற்கான அறிவிப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். பாபர் அசாமிடம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட பாபர் அசாம், ரசிகருடன் போஸ் கொடுத்தார். அப்போது அந்த ரசிகர்கள் தனது கைகளை பாபர் அசாமின் தோளில் வைக்க முயற்சித்துள்ளார்.
இதனால் டென்ஷனான பாபர் அசாம் உடனடியாக முகம் சுழித்து, தொடதீர்கள் என்று சைகை செய்திருக்கிறார். இருந்தாலும் அந்த ரசிகருடன் செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய வீரர்கள் பலரும் ரசிகர்களை கட்டிப்பிடித்து கூட செல்ஃபி எடுத்து கொடுப்பார்கள்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மைதானத்தில் கூட வீரர்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை கொடுப்பார்கள். அவர்கள் விளையாடிவிட்டு நடந்து வரும் போது கூட ஏராளமான ரசிகர்கள் வீரர்களின் தோளினை தட்டிக் கொடுத்து ஓய்வறைக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் பாபர் அசாம் ரசிகர் ஒருவர் தன்னை தொடவே அனுமதிக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாபர் அசாமின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.