லாகூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மொத்தமாக மூன்று முறை மோதியது. இந்த மூன்று முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றது. கடைசியாக செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இந்த போட்டி பல விமர்சனங்களுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வீரர்கள் நினைத்தனர்.

ஆனால் அவர்களுடைய நினைப்பு வெறும் கனவாகவே மாறியது. மூன்று முறை மோதியும் அதில் ஒரு முறை கூட பாகிஸ்தானால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இதனால் களத்தில் பேட்டால் பதிலடி கொடுக்க முடியவில்லை என்பதால் பாகிஸ்தான் வீரர்கள் தேவையில்லாத சைகைகளை காட்டி சர்ச்சையில் சிக்கினார்கள்.
பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக அரை சதம் அடித்து விட்டு அதனை துப்பாக்கியால் சுடுவது போல் கொண்டாடினார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. வெறும் பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவுப் இந்திய விமானங்களை சுட்டு விட்டோம் என்று சைகையில் காட்டி கொண்டாடினார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐசிசி ஹரிஷ் ரவுப்க்கு போட்டி ஊதியத்திலிருந்து 30 சதவீதம் அபராதமும் பர்கானுக்கு இவ்வாறு செய்யக்கூடாது என எச்சரிக்கையும் ஐசிசி விடுத்திருந்தது. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் ஃபர்கான் அரை சதம் அடித்த போது ஐசிசியின் எச்சரிக்கை காரணமாக எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.
ஆனால் இந்தியாவை தோற்கடிக்க முடியவில்லை என்ற விரக்தி பாகிஸ்தான் வீரர்களை தூங்கவிடாமல் செய்கிறது. இதனால் இந்தத் தொடர் முடிவடைந்து சுமார் இரண்டு வாரங்கள் நிறைவு அடையப் போகிறது. ஆனால் இன்னும் பாகிஸ்தான் வீரர்கள் தேடி வந்து இந்திய வீரர்களை வம்பிழுகின்றனர். பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஃபர்கான், பேட்டை எடுத்து துப்பாக்கி போல் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்தார்.
இது இந்தியாவை சீண்டுவது போல் இருந்ததாக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பாகிஸ்தானை வீழ்த்திவிட்டு இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா என அடுத்த பயணம் குறித்து தங்களது கவனத்தை நகர்த்தி விட்டதாகவும், ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் இன்னும் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது குறித்து அழுது கொண்டே இருப்பதாகவும் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.