மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல முடியாது என்றும் ஹைபிரிட் முறையில் வெளிநாடுகளில் தாங்கள் விளையாடும் போட்டியை நடத்த வேண்டும் என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
இதனால் இந்தியாவை சமாளிக்கும் முயற்சியில் ஐசிசி ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி, இந்தியா வரவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் அழிந்து விடாது என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று 50 உலகக் கோப்பை தொடரில் விளையாடியது. இதனால் இந்தியாவும் பாகிஸ்தானுக்கு கண்டிப்பாக வரவேண்டும். நான் பல இந்திய வீரர்களின் நேர்காணலை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாட விரும்பவில்லை என்று கூற முடியாது. எனினும் இந்திய நாட்டின் கொள்கைகள் அவர்கள் அரசு எடுக்கும் முடிவு பொறுத்து தான் இந்தியா இங்கு வருவது குறித்து யோசிக்க முடியும். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சொல்வது போல் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது என்றால் அது பாகிஸ்தானில் மட்டும் தான் விளையாடப்பட வேண்டும்.
இந்தியா இங்கு வர விரும்பவில்லை என்றால் அவர்கள் இல்லாமலேயே தொடரை நடத்துவது தான் சரியாக இருக்கும். இந்தியா வந்து பங்கேற்கவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்து விடாது என்று ஹசன் அலி காட்டமாக பதில் கூறியிருக்கிறார். எனினும் இந்தியா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடவில்லை என்றால் அது மிகப்பெரிய பொருள் இழப்பை ஏற்படுத்தும். இதனால் துபாய் அல்லது இலங்கையில் இந்தியா போட்டிகளை மட்டும் நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.