கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் தொடக்க வீராங்கனை முனீபா அலி, மூன்றாவது நடுவரின் முடிவால் ரன்-அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் "ஐசிசி = பிசிசிஐ (ICC = BCCI)" என பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கி இருக்கின்றனர். மூன்றாவது நடுவர், முதலில் 'நாட்-அவுட்' என்று அறிவித்துவிட்டு, பின்னர் தனது முடிவை மாற்றி 'அவுட்' கொடுத்தது, பாகிஸ்தான் ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
போட்டியின் நான்காவது ஓவரில், தீப்தி ஷர்மா மின்னல் வேகத்தில் வீசிய பந்தால் இந்த சர்ச்சை வெடித்தது. இந்திய அணி எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்துகொண்டிருந்தபோது, முனீபா அலி இயல்பாக க்ரீஸை விட்டு வெளியே வந்து, மீண்டும் க்ரீஸுக்குள் தனது பேட்டை ஊன்றிவிட்டு லேசாகத் தூக்கிய நொடியில், பந்து ஸ்டம்பைத் தாக்கியது.
மூன்றாவது நடுவர் கெர்ரின் கிளாஸ்டே, முதல் ரீப்ளேவில் 'நாட்-அவுட்' என்று அறிவித்தார். ஆனால், சில விவாதங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் ரீப்ளேக்களை மிக மிக மெதுவாக ஆராய்ந்தார். அப்போது, பந்து ஸ்டம்பைத் தாக்கிய சரியான நொடியில், முனீபாவின் பேட் க்ரீஸ் கோட்டிற்கு உள்ளேதான் இருந்தது, ஆனால் அது தரையில் படாமல், லேசாகக் காற்றில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து, தனது முந்தைய முடிவை மாற்றிய கிளாஸ்டே, 'அவுட்' என்று அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பால் பாகிஸ்தான் அணி அதிர்ச்சியில் உறைந்தது. கேப்டன் பாத்திமா சனா, மைதானத்திற்குள் வந்து நான்காவது நடுவருடன் தீவிரமாக விவாதத்தில் ஈடுபட்டார். முனீபா அலியோ, பெரும் ஏமாற்றத்துடன் களத்தை விட்டு வெளியேறினார்.

இந்தச் சம்பவம், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நடுவரின் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். "ஒருமுறை நாட்-அவுட் கொடுத்த பிறகு, எப்படி முடிவை மாற்றலாம்? இது அப்பட்டமான அநீதி." "ஐசிசி = பிசிசிஐ. மகளிர் கிரிக்கெட்டைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள் போல," என்று பல பாகிஸ்தான் ரசிகர்கள், நடுவரின் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டி கோபத்தை வெளிப்படுத்தினர்.
ரசிகர்களின் கோபம் ஒருபுறம் இருந்தாலும், கிரிக்கெட்டின் சட்டப் புத்தகமான எம்சிசி-யின் விதி 30.1 ரன்-அவுட் குறித்துத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது. "ஸ்டம்புகள் தகர்க்கப்படும்போது, பேட்ஸ்மேனின் பேட்டோ அல்லது உடலின் ஏதேனும் ஒரு பகுதியோ பாப்பிங் க்ரீஸுக்குப் பின்னால் தரையில் ஊன்றப்பட்டிருக்கவில்லை என்றால், அவர் அவுட் ஆவார். இதற்கு விதிவிலக்காக, ரன்னுக்காக ஓடும்போதோ அல்லது டைவ் அடிக்கும்போதோ மட்டுமே, பேட் அல்லது உடல் தரையில் பட்டுத் துள்ளி காற்றில் இருந்தாலும், அவுட் இல்லை" என்பதுதான் அந்த விதி.
முனீபா அலியின் விஷயத்தில், அவர் ரன்னுக்காக ஓடவோ, டைவ் அடிக்கவோ இல்லை. அவர் சாதாரணமாகக் க்ரீஸுக்குள் வந்து பேட்டை ஊன்றிவிட்டு, அதை லேசாகத் தூக்கியுள்ளார். எனவே, அந்த விதிவிலக்கு பொருந்தாது. அடிப்படை விதியின்படி, ஸ்டம்ப் உடையும்போது அவரது பேட் காற்றில் இருந்ததால், நடுவர் கொடுத்த 'அவுட்' தீர்ப்பு சரியானதுதான்.
இருப்பினும், ஒருமுறை 'நாட்-அவுட்' என அறிவித்துவிட்டு, பின்னர் முடிவை மாற்றியது, அதுவும் இந்தியா - பாகிஸ்தான் போன்ற பரபரப்பான போட்டியில் நடந்தது, இந்தச் சர்ச்சையை மேலும் பெரிதாக்கியுள்ளது. விதிகள் சரியாக இருந்தாலும், களத்தில் நிலவிய குழப்பம் இந்தச் சம்பவத்தை உலகக் கோப்பையின் மறக்க முடியாத சர்ச்சைகளில் ஒன்றாக மாற்றிவிட்டது.