கொழும்பு : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல் பறக்கும் போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், குரூப் சுற்றில் இந்த அணிகள் மோதிய போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டதுதான்.
தற்போது போட்டி நடைபெற உள்ள கொழும்பு பிரேமதேசா மைதானம் எந்த அணிக்கு சாதகமாக சாதகமாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடைசி போட்டி : பாகிஸ்தான் அணி இந்த மைதானத்தில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆடி ௫௯ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஆக, இந்த மைதானத்தில் சமீபத்தில் ஆடிய அனுபவமும், அத்துடன் அதில் வெற்றியும் பெற்று பாகிஸ்தான் தனக்கு சாதகமான சூழலைப் பெற்றுள்ளது.
இந்தியா தோல்வி : இந்த மைதானத்தில் இந்திய அணி கடைசியாக ஆடியது 2021 டி20 போட்டியில்தான். அந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது.
அதிக போட்டிகள் யார்? : இந்த மைதானத்தில் அதிக ஒருநாள் போட்டிகள் ஆடி இருக்கும் அணி இந்தியா. 46 போட்டிகளில் 23 வெற்றிகள், 19 தோல்விகள் அடைந்துள்ளது. அதிகபட்சமாக 375 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி. மறுபுறம் பாகிஸ்தான் அணி 23 ஒருநாள் போட்டிகளில் 13 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகளை பெற்றுள்ளது.
கோலி ஆறுதல் : இந்திய அணிக்கு இந்த மைதானத்தில் இருக்கும் பெரிய ஆறுதல் விராட் கோலி மட்டுமே. அவர் இந்த மைதானத்தில் ஆடிய கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து சதம் அடித்து அசத்தி இருக்கிறார். கடைசியாக அவர் இங்கு ஆடிய டி20 போட்டியில் கூட அவர் அரைசதம் விளாசி இருக்கிறார்.
போட்டி நடக்குமா? : இந்த சாதக பாதகங்கள் ஒருபுறம் இருந்தாலும், நாளை மழை காரணமாக இந்த போட்டி நடைபெறாமலும் போகலாம் என கூறப்படுகிறது. மழையால் போட்டி தடைபட்டால் ரிசர்வ் நாளான திங்கள் அன்று போட்டி தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.