லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ஐசிசி), கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்தே புறக்கணிக்கப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் அணி 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் என்றும், ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாடாது என்றும் அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்துக் கடந்த சில நாட்களாகக் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், "பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசு, ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்க ஒப்புதல் அளிக்கிறது. இருப்பினும், பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமிறங்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேச அணி நீக்கப்பட்டது தொடர்பான விவகாரமே பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர மறுத்த வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி ஏற்காத நிலையில், வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது.
முழுத் தொடரையும் புறக்கணித்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு மற்றும் ஐசிசியின் தடைகளைத் தவிர்க்க, தொடரில் பங்கேற்பது என்றும், அதேசமயம் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிப்பது என்றும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. எனினும், இதன் பின்விளைவுகளை பாகிஸ்தான் அணியை பாதிக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் ஏற்கனவே எச்சரித்து உள்ளனர். குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த 'இந்தியா - பாகிஸ்தான்' போட்டியைப் பாகிஸ்தான் அணி புறக்கணித்தால், விதிமுறைப்படி இந்திய அணிக்கு வெற்றிப் புள்ளிகள் வழங்கப்படும். அதே சமயம், இது ஐசிசிக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை நம்பியே ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் விளம்பரதாரர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். பாகிஸ்தானின் இந்த முடிவு அவர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, தனது மற்ற லீக் போட்டிகளில் திட்டமிட்டபடி விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 7: பாகிஸ்தான் எதிர் நெதர்லாந்து (கொழும்பு)
பிப்ரவரி 10: பாகிஸ்தான் எதிர் அமெரிக்கா (கொழும்பு)
பிப்ரவரி 15: பாகிஸ்தான் எதிர் இந்தியா (இந்த போட்டியைப் புறக்கணிக்கிறது)
பிப்ரவரி 18: பாகிஸ்தான் எதிர் நமீபியா (கொழும்பு)
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசம், பஹீம் அஷ்ரப், பக்கர் ஜமான், கவாஜா முகமது நஃபாய், முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.