IND vs PAK: "நாங்க ஜெயிச்சுட்டோம்.. இந்தியா பதறிப் போச்சு" முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹபீஸ் பிதற்றல்
கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு முன்பாகவே, பாகிஸ்தான் அணி இந்தியாவை மனதளவில் வீழ்த்திவிட்டதாக முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் குறித்தான பேச்சுக்களே இதற்கு சான்று என்றும் அவர் கூறியுள்ளார்.
உளவியல் ரீதியான வெற்றி
இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாகப் பேசிய முகமது ஹபீஸ், "கிரிக்கெட் ரீதியாகப் பார்த்தால், உஸ்மான் தாரிக் குறித்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பரபரப்பு பாகிஸ்தானுக்குக் கிடைத்த மிகப்பெரிய உளவியல் ரீதியான வெற்றியாகும். இப்போது யாரும் பாபர் அசாம் பற்றியோ அல்லது மற்ற பெரிய வீரர்கள் பற்றியோ பேசவில்லை. எல்லோரும் உஸ்மான் தாரிக்கைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்" என்று கூறினார்.

இந்திய முகாமில் பதற்றம்
மேலும் பேசிய அவர், "உஸ்மான் தாரிக் பாகிஸ்தானுக்காக ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் இந்திய முகாமில் அவர் எந்த அளவுக்குப் பதற்றத்தை உருவாக்கியுள்ளார் என்று பாருங்கள். இந்திய வீரர்கள் தங்கள் வலைப்பயிற்சியில் அவருக்கென்று தனியாகத் தயாராகி வருகிறார்கள். வெறும் 4 போட்டிகள் மட்டுமே விளையாடிய ஒருவரைப் பற்றி இந்த உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறது. இதுவே பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றிதான்" என்று ஹபீஸ் பெருமிதத்துடன் கூறினார்.
தாக்குதல் ஆட்டம் தேவை
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுக்கு அறிவுரை வழங்கிய ஹபீஸ், "உஸ்மான் தாரிக்கை கேப்டன் எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். அவரைத் தற்காப்புக்காகப் பயன்படுத்தினால் அது வேலைக்கு ஆகாது. அவரை விக்கெட் வீழ்த்தும் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்."
"குறிப்பாகப் பவர் பிளேயின் கடைசி ஓவரான 6வது ஓவரில் அவரைப் பந்துவீச வைத்தால் அது ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த ஓவர் எப்போதும் முக்கியமானது. அப்ரார் அகமது, நவாஸ், ஷதாப் கான் போன்றவர்கள் இருந்தாலும், இப்போது எல்லாருடைய கவனமும் தாரிக் மீதுதான் உள்ளது. இதைத் தனக்குச் சாதகமாகப் பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று ஹபீஸ் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள் உஸ்மான் தாரிக்கை பார்த்து பயப்படுகிறார்கள் என ஹபீஸ் கூறுவது எந்த அளவுக்கு உண்மை? என்பது இந்தப் போட்டியின் முடிவில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications