துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில், இந்தியாவிடம் படுதோல்வி அடைந்ததோடு, மைதானத்திற்கு வெளியேயும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் பாகிஸ்தான் அணியை, 1983 உலகக் கோப்பை நாயகனும், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளருமான மதன் லால் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
களத்தில் திறமையின்றி ஆடுவதும், களத்திற்கு வெளியே தொடரைப் புறக்கணிப்போம் என நாடகமாடுவதும் பாகிஸ்தான் அணியின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்று அவர் பொங்கி எழுந்துள்ளார். குறிப்பாக, "தற்போது விளையாடும் பாகிஸ்தான் அணிக்கு எந்த ஒரு 'கிளாஸ்'ஸும் இல்லை" என்று அவர் கூறி இருக்கிறார்.

செப்டம்பர் 14 அன்று துபாயில் நடைபெற்ற லீக் போட்டியில், இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் வெறும் 127 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோரை அடித்த சாஹிப்சாதா ஃபர்ஹான் (40), ரன் குவிக்க மிகவும் திணறினார்.
ஒருவேளை, வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி கடைசியில் அதிரடியாக 33 ரன்கள் விளாசாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் அணி இன்னும் மோசமான ஸ்கோரில் ஆட்டமிழந்திருக்கும். இந்தப் படுதோல்வியைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கை கொடுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறியது, பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த சம்பவத்தை ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), தொடரைப் புறக்கணிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தது. மேலும், போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்-ஐ நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளை மதன் லால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"பாகிஸ்தான் சரணடைந்துவிட்டது, ஏனென்றால் அவர்களின் கோரிக்கை உண்மையானது அல்ல. முதலில், நாம் ஏன் அவர்களுடன் கை குலுக்க வேண்டும்? இது எந்த விதிப்புத்தகத்திலும் குறிப்பிடப்படவில்லை. இரண்டாவதாக, போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்-ஐ ஏன் நீக்க வேண்டும்? இது ஒரு சர்வதேச தரம் வாய்ந்த போட்டி, இங்கு இப்படி சிறுபிள்ளைத்தனமாக முடிவுகளை எடுக்க முடியாது" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "ஒருவேளை பாகிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியைப் புறக்கணித்திருந்தால், அதனால் யாருக்கு நஷ்டம்? பாகிஸ்தானுக்குத்தான் மிகப்பெரிய நஷ்டம். அவர்களின் கிரிக்கெட்டுக்கு அவர்களே சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியிருப்பார்கள். அந்த அணியின் பேட்டிங் முறையைப் பார்த்தால், எந்த ஒரு பாகிஸ்தான் அணியும் இப்படி ஆடியதை நான் பார்த்ததே இல்லை. தற்போதைய அணியிடம் திறமையே இல்லை. கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக அந்த அணியைப் பாருங்கள், ஒரு நல்ல வீரர் கூட உருவாகவில்லை" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள், சூப்பர் ஃபோர் சுற்றில் மீண்டும் நாளை (செப்டம்பர் 21) மோதவிருக்கும் நிலையில், மதன் லால் போன்ற மூத்த வீரரின் இந்தக் கடுமையான விமர்சனங்கள், போட்டியின் மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.