துபாய்: ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணிக்கு ஒரேயொரு வாய்ப்பு மட்டும் இருக்கிறது. அதாவது டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்து 185 ரன்களுக்கு மேல் குவித்தால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்துவது குறித்து பாகிஸ்தான் அணியால் சிந்திக்கவே முடியும் என்று பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை விளையாட உள்ளன. ஏற்கனவே லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது. அந்த 2 முறையும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதோடு, அவமானத்தையும் கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களில் ஃபர்ஹான், ஃபகர் ஜமான் ஆகியோர் அதிரடியாக விளையாடினாலும், மிடில் ஆர்டரில் சல்மான் ஆகா, முகமது நவாஸ் மற்றும் ஃபஹீம் அஷ்ரப் ஆகியோரால் மட்டுமே நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியும். இதனால் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டரை வீழ்த்திவிட்டாலே, மிடில் ஆர்டரை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
இதனைதான் இந்திய அணி 2 போட்டிகளிலும் செய்திருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாடி பவர் பிளேவில் விக்கெட் கொடுக்கவில்லை என்றால், அந்த அணியால் எளிதாக 185 ரன்களை எட்ட முடியும். ஒருவேளை பாகிஸ்தான் அணியால் 170 ரன்களுக்கு கீழ் மட்டுமே எடுக்க முடிந்தால், இந்திய அணியின் பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்துவது முடியாத விஷயமாகும்.
அதேபோல் அபிஷேக் சர்மாவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அவரின் கண்களில் இலக்கை காட்ட வேண்டும். 2 ஓவர்கள் அழுத்தம் கொடுத்தாலே, தேவையில்லாத ஷாட்களை விளையாடி விக்கெட்டை பறிகொடுத்துவிடுவார். இதன்பின் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை எக்ஸ்ட்ரா வேகத்தில் வீசினாலே கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஒருவேளை டாஸ் வென்று இந்திய அணி 180 ரன்களுக்கு மேல் குவித்தாலும், பாகிஸ்தான் அணியால் சேஸிங் செய்ய முடியாது என்றே பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பாகிஸ்தான் அணி பவுலர்கள் கூடுதல் திட்டத்துடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்திய அணி வீரர்களுடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. இதனால் அவர் சிறப்பு திட்டங்களுடன் பைனலில் களமிறங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.