கொழும்பு: ஐசிசி ஆடவர் டி20 உலககோப்பை 2026 தொடரில் அமெரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான், அடுத்ததாக இந்தியாவுக்கு எதிரான முக்கியப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியில் ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் களமிறங்குவோம் என பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் தெரிவித்துள்ளார். இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த ஆட்டத்தில் அமெரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
குரூப் 'ஏ' பிரிவு போட்டியில், சாஹிப்சாதா ஃபர்ஹான் 41 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் அதிரடியாக 73 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் பாபர் அசாம் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 46 ரன்கள் சேர்த்தார்.

இப்போட்டியின் 16வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்மீத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறும் முன், ஃபர்ஹான் தனது 41வது டி20 சர்வதேசப் போட்டியில் 1000 ரன்களைக் கடந்தார். அதேபோல, அணிக்கு பந்துவீச்சில் பலம் சேர்த்த உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் தங்கள் பரம எதிரியான இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்ளவுள்ளது. ஆரம்பத்தில் புறக்கணிப்பதாக அறிவித்த பாகிஸ்தான் அரசு, திங்கட்கிழமைதான் இப்போட்டிக்கு அனுமதி அளித்தது. இது குறித்து பேசிய ஆட்டநாயகன் விருது பெற்ற ஃபர்ஹான் ="ஆசியக் கோப்பை உட்பட இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடிய முந்தைய போட்டிகளில் இருந்த அதே மனநிலையுடன் களமிறங்குவோம். நேர்மறையாகவும், ஆக்ரோஷமாகவும் விளையாட முயற்சிப்போம்," என்றார்.
"நேற்று நாங்கள் பயிற்சி செய்த விதத்தில், வலைப் பயிற்சியில் பந்து என் பேட்டிற்கு மிக நன்றாக வந்தது. போட்டிக்கான நல்ல உணர்வு எனக்கு இருப்பதாக எங்கள் பேட்டிங் பயிற்சியாளர் (ஹனீஃப் மாலிக்) ஹனீஃப் மாலிக்கிடம் நேற்றே சொல்லிவிட்டேன்," என்று ஃபர்ஹான் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர், "இந்த உலகக் கோப்பையில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆட்டநாயகன் விருதுகளை வெல்வதே எனது தனிப்பட்ட இலக்கு," என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கு எதிரான இந்த வெற்றி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அடைந்த அதிர்ச்சித் தோல்விக்கு பழிதீர்த்தது. அத்துடன், சனிக்கிழமை நெதர்லாந்திற்கு எதிரான மூன்று விக்கெட் வெற்றிக்குப் பிறகு, இந்தத் தொடரில் பாகிஸ்தானின் இரண்டாவது வெற்றியாகும். இது குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா, "நாங்கள் பாகிஸ்தானியர்கள். உலகத்தை விட வித்தியாசமாகச் செயல்படுவோம்," என்று பெருமையுடன் கூறினார்.
"இது ஒரு சிறப்பான ஆட்டம். நாங்கள் சிறப்பாக பேட் செய்து 190 ரன்கள் குவித்தோம், அதை எங்களால் பாதுகாக்க முடியும் என்று எங்களுக்குத் தெரியும். இருப்பினும், முன்னேற்றத்திற்கு எப்போதும் வாய்ப்பு உள்ளது. அடுத்த போட்டிக்கு முன் பவர்பிளேயில் இன்னும் சிறப்பாக பந்துவீச விரும்புகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.