லாகூர்: இந்தியாவுடனான டி20 உலகக்கோப்பை போட்டியைப் புறக்கணிப்போம் என்று மிரட்டி வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தற்போது போட்டியில் பங்கேற்பதற்கு மூன்று புதிய கோரிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வசம் வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தையும் இணைத்துக்கொண்டு பாகிஸ்தான் ஆடும் இந்த ஆட்டம், ஐசிசிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா என்ற இழுபறி நீடித்து வந்த நிலையில், பாகிஸ்தானின் லாகூர் நகரில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்பதற்குப் பாகிஸ்தான் சில புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்காலத்தில் ஐசிசி தொடரை நடத்தும் உரிமை: பாகிஸ்தான் அணி இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால், எதிர்காலத்தில் நடைபெறும் முக்கிய ஐசிசி தொடர்களில் ஒன்றை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
வங்கதேசத்திற்கு அதிக நஷ்ட ஈடு: உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்ட வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு, ஐசிசி வழங்கும் நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும்.
வங்கதேசத்திற்கு பங்கேற்பு கட்டணம்: உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேசம் பங்கேற்கவில்லை என்றாலும், அந்த அணிக்குரிய பங்கேற்புக் கட்டணத்தை ஐசிசி வழங்க வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளும், முன்னதாக பாகிஸ்தான் கேட்டதாகக் கூறப்பட்ட கூடுதல் நிதி மற்றும் இந்தியாவுடன் இருதரப்புத் தொடரை மீண்டும் தொடங்குவது போன்ற கோரிக்கைகளுக்கு மேல் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியாக இருந்தாலும், வாரியத்தின் மற்ற சில அதிகாரிகள் போட்டியில் விளையாடவே ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில், ஒருவேளை பாகிஸ்தான் தனது புறக்கணிப்பு முடிவைக் கைவிடவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஐசிசி தரப்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'தவிர்க்க முடியாத காரணங்களால்' (Force Majeure) போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் வாதிட்டது. ஆனால், "ஒரு தொடரில் மற்ற போட்டிகளில் பங்கேற்கும்போது, ஒரே ஒரு போட்டியை மட்டும் புறக்கணிக்க இந்த விதியை எப்படிப் பயன்படுத்த முடியும்?" என்று ஐசிசி கேள்வி எழுப்பி பாகிஸ்தானின் வாதத்தை நிராகரித்துவிட்டது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை வைத்து பாகிஸ்தான் ஒரு பெரிய பேரத்தை ஐசிசியிடம் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டி நடைபெறாவிட்டால் ஏற்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தைத் தவிர்க்க, ஐசிசி பாகிஸ்தானின் கோரிக்கைகளுக்குப் பணியுமா அல்லது தனது முடிவில் உறுதியாக இருக்குமா என்பது அடுத்த சில தினங்களில் தெரிந்துவிடும்.