துபாய்: இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டியின் 'கைகுலுக்கல் சர்ச்சை'யை சுட்டிக் காட்டி அந்த அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப், ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை மீண்டும் மீண்டும் 'பன்றி' என்று கூறி இழிவுபடுத்தியது, கிரிக்கெட் உலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சமா டிவி' என்ற பாகிஸ்தான் தொலைக்காட்சி நடத்திய விவாதத்தில், கைகுலுக்கல் சர்ச்சை குறித்துப் பேசிய முகமது யூசுப், தனது வரம்பை மீறி, மிகக் கீழ்த்தரமான விமர்சனத்தை முன்வைத்தார். "இந்தியாவால் தங்களின் சினிமா உலகத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. நடுவர்களைப் பயன்படுத்தி, போட்டி நடுவர் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்கள் வெற்றி பெற முயற்சிக்கும் விதம் வெட்கக்கேடானது" என்று கூறிய யூசுப், அதன் பிறகு சூர்யகுமார் யாதவை 'பன்றி' என்று குறிப்பிடத் தொடங்கினார்.
விவாதத்தின் நெறியாளர், யூசுப்பின் இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, அவரைத் திருத்த முயன்றார். ஆனாலும், முகமது யூசுப் அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து சூர்யகுமாரை அதே வார்த்தையால் திட்டித் தீர்த்தார். 17,000 சர்வதேச ரன்களுக்கு மேல் குவித்த ஒரு மூத்த வீரரின் இந்த தரம் தாழ்ந்த பேச்சு, சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. போட்டி முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், இந்திய ராணுவப் படைகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கும் விதமாகவும், இந்த முடிவை இந்திய அணி எடுத்ததாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கமளித்திருந்தார்.
இந்திய வீரர்களின் இந்தச் செயலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை நீக்கக் கோரி ஐசிசியிடம் புகார் அளித்தது. ஆனால், ஐசிசி வட்டாரங்கள் பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கையை நிராகரிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன.
"பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கப்படும். அவர்களின் கோரிக்கையை ஐசிசி ஏற்றால், அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும். எதிர்காலத்தில் சிறிய கிரிக்கெட் நாடுகள் கூட இதே போன்ற கோரிக்கைகளை வைக்கும்," என்று ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒருபுறம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமான வழிகளில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் நிலையில், முகமது யூசுப் போன்ற முன்னாள் வீரர்கள் தனிப்பட்ட முறையில், வரம்பு மீறி இந்திய வீரர்களைத் தாக்குவது, இந்த இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் உறவை மேலும் சீர்குலைத்துள்ளது. விளையாட்டு வீரர் உணர்வை முற்றிலுமாக மறந்து, தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களின் செயல், அந்த நாட்டின் கிரிக்கெட் எந்த அளவிற்குத் தாழ்ந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.