துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி தற்போது வங்கதேசத்தை நம்பி இருக்கிறது. பாகிஸ்தான் ரசிகர்கள் அடுத்து நடைபெற்று வரும் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை உற்று நோக்கி உள்ளனர்.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதிக்கான வாய்ப்பை நூலிழையில் தக்க வைக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. இந்தப் போட்டி பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாமல் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நான்கு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமைந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும். ஏனெனில், தற்போது இந்த குரூப் ஏ பிரிவில் இந்தியா தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வென்று நான்கு புள்ளிகளுடன் உள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆடி வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. பாகிஸ்தான் அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் -1.087 என்ற நெட் ரன் ரேட்டுடன் உள்ளது. தற்போது வங்கதேசம் இந்தியாவிற்கு எதிராக மட்டும் தோல்வி அடைந்து இருக்கிறது.
வங்கதேச அணி அடுத்து நியூசிலாந்தை வீழ்த்திவிட்டு பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தால் இரண்டு புள்ளிகளுடன் இருக்கும். அதேபோல பாகிஸ்தான், வங்கதேசத்தை வீழ்த்தினால் இரண்டு புள்ளிகளைப் பெறும். மறுபுறம் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை மட்டும் வீழ்த்தி இருக்கும் நிலையில் அடுத்து வங்கதேசம் மற்றும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தால் இரண்டு புள்ளிகளுடன் இருக்கும்.
அப்போது இந்தியா நான்கு புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தலா இரண்டு புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ அந்த ஒரு அணி மட்டும் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஆனால், இது எளிதாக நடந்து விடாது. நெட் ரன் ரேட் சிக்கலும் இதில் உள்ளது. தற்போது நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட் +1.2 என்பதாக உள்ளது. பாகிஸ்தான் நெட் ரன் ரேட் -1.087 என்பதாக உள்ளது. எனவே நியூசிலாந்து அணி, வங்கதேசத்திடம் படுதோல்வி அடைய வேண்டும். அடுத்து பாகிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு எதிராக இமாலய வெற்றி பெற வேண்டும்.
அப்படி நடந்தால் நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட் சரியும், பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் நியூசிலாந்தை விட உயரும். இப்படி அனைத்துமே பாகிஸ்தானுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். எனினும், இந்த இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் அணியின் முதல்படி என்பது வங்கதேசம், நியூசிலாந்தை வீழ்த்துவது தான். எனவே பாகிஸ்தான் ரசிகர்கள் வங்கதேசத்தை ஆதரித்து வருகின்றனர்.