கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் கதாநாயகனாகத் திகழ்ந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், போட்டிக்குப் பிறகு கடினமான ஆடுகளத்தில் ரன் குவித்தது குறித்து மனம் திறந்து பேசினார்.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்த ஆடுகளத்தில் மற்ற வீரர்கள் திணறிய நிலையில், இஷான் கிஷன் மட்டும் 40 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவரது பேட்டிங்கால் இந்தியா 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது.

விருது பெற்ற பிறகு பேசிய இஷான் கிஷன், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இது பேட்டிங் செய்வதற்கு எளிதான ஆடுகளம் கிடையாது. பந்து நின்று திரும்பியது. இதுபோன்ற நேரங்களில் நம்முடைய பலத்தின் மீது நம்பிக்கை வைத்து விளையாடுவதுதான் முக்கியம். நான் பந்தை மட்டுமே கூர்ந்து கவனித்தேன். என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைத்தேன். அதேசமயம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை ஓடவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்று கூறினார்.
வழக்கமாக லெக் சைடில் அதிகம் அடிக்கும் இஷான் கிஷன், இந்த முறை ஆஃப் சைடில் அதிகம் பவுண்டரி அடித்தது குறித்துக் கேட்டபோது, "நான் ஆஃப் சைடில் ஷாட்களை ஆடுவதற்கு நிறையப் பயிற்சி எடுத்தேன். ஏனெனில் நான் ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டும்தான் அடிப்பேன் என்று பந்துவீச்சாளர்கள் கணித்துவிடுவார்கள். நான் ஆஃப் சைடில் ஆடும்போது, நான் விரும்பும் இடத்தில் அவர்களைப் பந்துவீச வைக்க முடிகிறது. இது ஒரு பெரிய மைதானம் என்பதால், இடைவெளிகளைக் கண்டறிந்து இரண்டு ரன்களாக ஓடி ரன்களைச் சேர்க்க முயற்சித்தேன்" என்று விளக்கினார்.
மேலும் பேசிய இஷான் கிஷன், "நாங்கள் 160 முதல் 170 ரன்கள் வரை எடுத்தால், அது எங்களுக்குப் போதுமான ஸ்கோராக இருக்கும் என்று முன்பே கணித்தோம். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்பது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இது எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே பெருமைக்குரியது. பாகிஸ்தான் அணியில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அவர்களுக்கு எதிராகப் பெற்ற இந்த வெற்றி, வரும் போட்டிகளுக்கு எங்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்" என்று தெரிவித்தார்.
இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்துப் பேசிய இஷான் கிஷன், "பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார்கள். நான் பேட்டிங் செய்யும்போது, ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்தேன். ஆனால், பும்ராவால் புதிய பந்திலும் சரி, கடைசி ஓவர்களிலும் சரி எப்படிப் பந்துவீச முடியும் என்பது நமக்குத் தெரியும். அதேபோல ஹர்திக் பாண்டியா மிகத் துல்லியமான லைனில் பந்துவீசி, தனது திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினார். இந்த வெற்றிக்கு அவர்களும் முக்கியக் காரணம்," என்று இஷான் கிஷன் பாராட்டினார்.
இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தானை 114 ரன்களில் சுருட்ட உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.