துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது. இன்னும் குரூப் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதாகவே பல ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் இன்னும் இந்திய அணி 100% அரையிறுதிக்கு முன்னேறி விடவில்லை.
சில எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழக்கவும் வாய்ப்புள்ளது. அது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம். குரூப் ஏ பிரிவில் இன்னும் மூன்று போட்டிகள் மீதம் உள்ளன. அவற்றில் வங்கதேச அணி, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றால் நான்கு புள்ளிகளைப் பெறும்.

மறுபுறம் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணியும் நான்கு புள்ளிகளுடன் இருக்கும். அப்போது இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் தலா நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இடம் பெற்று இருக்கும். பாகிஸ்தான் மட்டும் கடைசி இடத்தில் புள்ளிகள் ஏதுமின்றி இருக்கும்.
அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் எந்த இரண்டு அணி முதல் இரண்டு இடங்களில் இருக்கிறதோ அந்த இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும். வங்கதேச அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை வீழ்த்துவது கடினம் என்ற எண்ணத்தாலேயே தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி விட்டதாக பலரும் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா? என்பதை வைத்து இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை நாம் உறுதியாக கூற முடியும்.
இதே சிக்கல் பாகிஸ்தான் அணிக்கும் உள்ளது. வங்கதேசம், நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்வதற்கான குறைந்தபட்ச வாய்ப்பை தக்க வைக்க முடியும். அதன் பின் பல்வேறு நிகழ்வுகளும் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருந்தால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும். என்ன நடக்கிறது? என பொறுத்திருந்து பார்க்கலாம்.