நியூயார்க் : 2024 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான குரூப் "ஏ" சுற்று போட்டி மழையால் சிறிது நேரம் தடைப்பட்டது. டாஸ் போடப்பட்ட பின்னரும் சிறிது நேரம் மழை பெய்ததால் போட்டி சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவே துவங்கியது.
போட்டி நேரத்திலும் மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை கூறி இருப்பதால் ஒருவேளை இந்த போட்டி மழையால் தடைப்பட்டு, பாதியில் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான விதிகளின் படி ஒவ்வொரு குரூப்பிலும் இடம் பெற்று இருக்கும் அணிகள் ஒரு போட்டியில் வென்றால் இரண்டு புள்ளிகள் அளிக்கப்படும். ஒரு வேளை மழை போன்ற காரணங்களால் போட்டி கைவிடப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் பாகிஸ்தான அணி பலவீனமாக உள்ளது. இந்தியா எளிதாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்ற நிலையே உள்ளது. இந்த சூழ்நிலையில் போட்டி கைவிடப்பட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி மட்டும் வழங்கப்பட்டால் அது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படும்.
மேலும், அடுத்து உள்ள போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, இந்திய அணி மேலும் ஒரு போட்டியில் மழையால் ஒரு புள்ளி மட்டுமே பெற்றால் நிலைமை மேலும் மோசமாகிவிடும். இந்திய அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் கூட போகலாம். எனவே, இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது என்பது முக்கியம் ஆகும். ஏற்கனவே, குரூப் "ஏ" பிரிவில் அமெரிக்க அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் இரண்டு வெற்றிகளை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது. போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கிய நிலையில் முதல் ஓவரை ஷஹீன் ஷா அப்ரிடி வீசி முடித்த உடன் மீண்டும் மழை பெய்தது. போட்டி தடைபட்டது.