துபாய்: 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்துப் பெரும் விவாதம் நடந்து வரும் நிலையில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கட்டாயம் விளையாட வேண்டும் என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இந்திய அணி நிர்வாகம், நீண்ட பேட்டிங் வரிசைக்கு (Batting Depth) முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அஸ்வின் இந்த மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் தற்போது ஆல் ரவுண்டர்களையும் சேர்த்து எட்டு பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்த நீண்ட பேட்டிங் வரிசைக்காக அர்ஷ்தீப் சிங் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக இருந்தாலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிரந்தரமாக தேர்வு செய்யப்படவில்லை.

இது பற்றி தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசிய அஸ்வின், "நான் இதை என் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு சொல்கிறேன்! நீங்கள் என்னை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும், என் பதில் மாறாது: அர்ஷ்தீப் நிச்சயம் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும். 8வது இடத்தில் களமிறங்கும் ஒரு பேட்ஸ்மேன் எத்தனை ரன்களை அடித்துவிடப் போகிறார்? அவ்வளவு ரன்கள் நமக்குத் தேவையில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, பந்துவீச்சாளர்களின் பேட்டிங் திறனை மேம்படுத்துவதில் பேட்டிங் பயிற்சியாளர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அஸ்வின் அறிவுறுத்தினார்.
"இன்னும் ஆறு மாதங்களில் உலகக் கோப்பை வருகிறது. அர்ஷ்தீப் சிங்கின் பேட்டிங்கில் கவனம் செலுத்துங்கள், வருண் சக்கரவர்த்தியின் பேட்டிங்கில் கவனம் செலுத்துங்கள். பும்ராவால் ஏற்கனவே ஓரளவு பேட் செய்ய முடியும். பேட்டிங் பயிற்சியாளர் இந்த வீரர்களுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்" என்றார்.
"டி20 போட்டிகளில், பேட்டிங் பயிற்சி என்பது சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பொதுவாக, ஒரு மோசமான நாளாக இல்லாவிட்டால், 8வது பேட்ஸ்மேனுக்கு 4-6 பந்துகள் மட்டுமே கிடைக்கும். அந்தப் பந்துகளில் அதிகபட்ச ரன்களை எடுப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும், அர்ஷ்தீப் சிங்கிற்கு அதிரடியாக ஆடும் திறன் உள்ளது" என்று அஸ்வின் விளக்கினார்.
"ஆனால், முக்கியமான தருணத்தில், உதாரணமாக 10 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்படும்போது, எப்படி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது, எந்த பந்துவீச்சாளரைக் குறிவைத்து பவுண்டரிகள் அடிப்பது போன்ற விஷயங்களைப் பற்றி அவர்கள் பேச வேண்டும். இது வெறும் வலைப் பயிற்சியைப் பற்றியது மட்டுமல்ல; குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நடைமுறைத் திட்டமிடல் பற்றியது" என்றும் அஸ்வின் கூறினார்.
இந்த ஆசிய கோப்பை தொடரில், அர்ஷ்தீப் சிங் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அணி நிர்வாகம் நீண்ட பேட்டிங் வரிசைக்கு முன்னுரிமை அளிப்பதால், அவருக்குத் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கைக்கு எதிரான கடைசிப் போட்டியில், சூப்பர் ஓவரில் அபாரமாகப் பந்துவீசி இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.