துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், அந்தப் போட்டியை இந்திய அளவில் கோடிக்கணக்கானோர் நேரலையில் பார்த்துள்ளனர். மேலும், அந்தப் போட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை 17.7 கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர். ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகள் இல்லாமல் மற்ற போட்டிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது இதுவே கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட இரண்டாவது போட்டியாகும். நாக் அவுட் போட்டிகள் இதைவிட அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நீண்ட நெடிய பகை வரலாறு இருப்பதால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் 2008க்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில்லை என்பதால், ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே பங்கேற்று வருகின்றன.
அந்தத் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை வைத்து தான் மொத்த விளம்பர வருவாயும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஒரு போட்டிக்கான வருவாய் தான் ஐசிசி தொடர்களின் அடிப்படை வருமானமாகவே உள்ளது.
இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி, இதற்கு முன் நடந்த 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியை விட அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஜியோ ஸ்டார் நிறுவனம் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
என்னதான் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என்றால் எதிர்பார்ப்பு இருந்தாலும், சமீப காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் சுவாரசியமாக இல்லை என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருவதால், இந்திய அணி தான் வெற்றி பெறும் என்பது முதலிலேயே தெரிந்து விடுவதால் போட்டியில் பரபரப்பு இல்லாமல், அதிக எதிர்பார்ப்பால் சலிப்பு ஏற்படுவதாக ரசிகர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.