துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான அணி வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை அந்த அணியால் தக்க வைக்க முடியும். இந்த சூழலில் பாகிஸ்தான் அணியில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை என்பது உலகம் அறிந்த விஷயம். ஆனால் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து அந்த அணி வீரர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்தது.

அதற்கு நல்ல பயனும் கிடைத்தது. முகமது ரிஸ்வான், தலைமையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடர்களில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 321 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த போது பாபர் அசாம் மோசமான முறையில் விளையாடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது.
முதல் 10 ஓவரில் வெறும் 22 ரன்களை மட்டும் தான் பாகிஸ்தான் கிடைத்தது. இதற்கு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் ஆகியோர் பாபர் அசாம் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடும் எண்ணத்திலே இல்லை என்று அவர்களை ரிஸ்வான் சாடி இருக்கிறார். இதனால் கடுப்பான பாபர் அசாம், ரிஸ்வான் உடன் சண்டை போட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பாபர் அசாம் கலந்து கொள்ளாமல் ஹோட்டல் அருகில் தங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் பாபர் அசாம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது. பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லாமல் வீரர்களுக்குள் மோதல் இருப்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாபர் அசாம் பயிற்சி முகாமுக்கு வராதது குறித்து விளக்கம் அளித்துள்ள அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அகிப் ஜாவித் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என பாபர் அசாம் விரும்பியதால் தான் அவர் பயிற்சி முகாமுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். பேட்டிங் வரிசையில் மூன்றாவது அல்லது நான்காவது வீரராக இறங்கி வந்த பாபர் அசாமை தொடக்க வீரராக ரிஸ்வான் களம் இறக்கியதும் பிரச்சனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.