லாகூர்: இந்தியாவுடனான ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டியைப் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு எடுத்த முடிவு சர்ச்சையாகி வரும் நிலையில், இந்த விவகாரம் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளைப் பாதிக்கவில்லை. தாய்லாந்தில் நடக்கும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பையில், பாகிஸ்தான் பெண்கள் 'ஏ’ அணி, இந்தியப் பெண்கள் 'ஏ’ அணியுடன் மோத உள்ளது.
இந்தப் போட்டியைப் புறக்கணிக்க இதுவரை எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை.பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடக்கின்றன. பாகிஸ்தான் பெண்கள் 'ஏ’ அணியும் இந்தியப் பெண்கள் 'ஏ’ அணியும் பிப்ரவரி 15-ஆம் தேதி மோதவுள்ளன.

அதே பிப்ரவரி 15-ஆம் தேதியன்றுதான், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், இந்தியாவை எதிர்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், “களமிறங்காது” என பாகிஸ்தான் அரசு X தளத்தில் எந்தக் காரணத்தையும் குறிப்பிடாமல் அறிவித்திருந்தது.
ஆண்கள் உலகக் கோப்பை புறக்கணிப்பு அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பெண்கள் 'ஏ’ அணியை அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் பெண்கள் 'ஏ’ அணி, இந்தியா 'ஏ’, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளத்துடன் குரூப் ஏ-யில் உள்ளது. குறைந்தபட்சம் தற்போதுவரை, பெண்கள் போட்டிகள் பாதிக்கப்படவில்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இந்த சூழலில் ஒரே நாளில் ஆண்கள் போட்டிக்கு ஒரு முடிவு, பெண்களுக்கு ஒரு முடிவு என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எப்படி எடுக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுங்கள் என்று அறிவுறத்த ஐசிசி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க அறிவுறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது,