நியூயார்க் : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலகிலேயே எந்த பேட்ஸ்மேனும் செய்யாத விசித்திரமான சிக்ஸர் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே அவர் சிக்ஸர் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா முதல் ஓவரை சந்தித்தார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி முதல் ஓவரை வீசினார்.

அந்த ஓவரில் ஒரு இமாலய சிக்ஸர் ஒன்றை அடித்தார் ரோஹித் சர்மா. அதன் மூலம் ஷஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் ஓவரில் சிக்ஸ் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற அரிய சாதனையை செய்தார் ரோஹித் சர்மா.
இதுவரை 67 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் ஆடி இருக்கும் ஷஹீன் ஷா அப்ரிடி, அதில் முதன்முறையாக முதல் ஓவரில் சிக்ஸரை விட்டுக் கொடுத்து இருக்கிறார். ரோஹித் சர்மா மேலும் ஒரு வித்தியாசமான விஷயத்தை செய்து இருக்கிறார். ஒரு நாள் போட்டிகளிலும் ஷஹீன் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரில் முதன் முறையாக சிக்ஸர் அடித்தவர் ரோஹித் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா 12 பந்துகளில் 13 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்து 119 ரன்கள் அவுட் ஆகி இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 4 ரன்கள் எடுத்தும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்கள் எடுத்தும் விக்கெட்களை இழந்தனர். ரிஷப் பண்ட் மட்டுமே 42 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.