நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால், டாஸ் போடுவதற்கே தாமதம் ஏற்பட்டது. இதன்பின் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் செய்வதாக தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடிய 7 ஆட்டங்களில், சேஸிங் செய்த அணிகளே வென்றுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் கொஞ்சம் பீதியில் இருந்தனர். இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஷாகின் அப்ரிடி முதல் ஓவரை வீசினார்.
ஏற்கனவே இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், ரோகித் சர்மாவுக்கு சுத்தமாக ஆகாது. ரோகித் சர்மா எளிதாக விக்கெட்டை விட்டுச் செல்வார் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஷாகின் அப்ரிடி வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே ரோகித் சர்மா அபாரமாக சிக்ஸ் ஒன்றை விளாசி அசத்த, முதல் ஓவர் முடிவில் இந்திய அணி 8 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பின் மீண்டும் மழை குறுக்கிட்டது.
சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், மீண்டும் ஆட்டம் தொடங்கியது. நசீன் ஷா பந்தில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து ரோகித் சர்மா பவுண்டரி அடித்து ஆறுதல் அளித்தார். இதனால் இன்றைய நாள் ரோகித் சர்மாவுக்கானதாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து 3வது ஓவரை வீச மீண்டும் ஷாகின் அப்ரிடி வந்தார்.
இந்த ஓவரின் 4வது பந்தை ஷாகின் அப்ரிடி கொஞ்சம் வேகம் குறைத்து ஸ்டம்பை நோக்கி வீச, அதனை சிக்ஸ் அடிக்க முயன்று ரோகித் சர்மா பேட்டை ஓங்கினார். கிட்டத்தட்ட முதல் ஓவரில் அடித்த சிக்சரின் ரீ-ப்ளே ஷாட் போல் அமைந்தது. ஆனால் இந்த ஷாட் நேராக ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த ஹாரிஸ் ராஃப் கையில் சென்று விழுந்தது. இதனால் ரோகித் சர்மா 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
நல்ல தொடக்கம் கிடைத்த நிலையில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அவசரத்தால் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். கிட்டத்தட்ட உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறியதை நினைவுப்படுத்தியது. இதனால் இந்திய அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.