கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். பிசிசிஐயின் கட்டுப்பாட்டில்தான் ஐசிசி இயங்குகிறது என்றும், அதனால், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான ஆடுகளத்தையே மாற்றிவிடுவார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணி தனது குரூப் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளையும் கொழும்பில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்றது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான முக்கியப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சக்லைன் முஷ்டாக், "நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மைதான பராமரிப்பாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். ஐசிசி யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். பிசிசிஐ நினைத்தால் இந்தியாவுக்குச் சாதகமாக ஆடுகளத்தை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது" என்று அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய ஆடுகளத்திற்கும், இந்தியாவுடன் விளையாடப்போகும் ஆடுகளத்திற்கும் வித்தியாசம் இருக்கும். இது பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறி இருக்கிறார். அதன் பின் இந்த பேச்சை மாற்றிய அவர் பாகிஸ்தான் அணியின் பிரச்சனைகளை பற்றி பேசினார்.
பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தேர்வு குறித்தும் சக்லைன் முஷ்டாக் கேள்வி எழுப்பியுள்ளார். "பாகிஸ்தான் அணியில் உள்ள ஒரே வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பஹீம் அஷ்ரப். ஆனால் முதல் இரண்டு போட்டிகளிலும் அவருக்கு பந்துவீச வாய்ப்பே வழங்கப்படவில்லை. உஸ்மான் தாரிக்கிற்கு வாய்ப்பு கொடுக்கிறீர்கள், சரி. ஆனால் கடைசி ஓவரை யார் வீசுவது? நவாஸ், ஷதாப் கான் அல்லது அப்ரார் அகமது வீசுவார்களா? கடைசி ஓவரை வீசும் அனுபவம் பஹீம் அஷ்ரப்பிற்குத்தான் உள்ளது" என்று சக்லைன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் வீரர்கள் உமர் குல் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோரும் சக்லைன் முஷ்டாக்கின் கருத்தை வழிமொழிந்தனர். நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற சிறிய அணிகளுக்கு எதிரான போட்டிகளிலேயே பஹீம் அஷ்ரப்பிற்கு பந்துவீச வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா போன்ற பெரிய அணிகளை எதிர்கொள்ளும்போது அவருக்குத் தன்னம்பிக்கை இருக்கும் என்று அவர்கள் கூறினர்.
கேப்டன் சல்மான் ஆகாவின் இந்த முடிவு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போதுமே அனல் பறக்கும் என்பது தெரிந்ததே. இந்நிலையில் சக்லைன் முஷ்டாக்கின் இந்தத் 'திடீர்' குற்றச்சாட்டு இந்திய ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளது. இந்தியாவின் வெற்றிகளை குறைத்து மதிப்பிடும் வகையில் சக்லைன் முஷ்டாக் பேசி இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஆதிக்கம் செலுத்தி வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.