லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, அந்நாட்டு முன்னாள் வீரர்கள் பலரும் தற்போதைய அணியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் பேசிய கருத்துக்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலையிட்டு ஷதாப் கானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிக்கு உதவிய ஷதாப் கான், போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் வீரர்களைச் சாடினார். அவர் பேசுகையில், "முன்னாள் வீரர்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். அவர்கள் ஜாம்பவான்களாக இருக்கலாம், ஆனால் எங்களால் முடிந்த ஒரு காரியத்தை அவர்களால் செய்ய முடியவில்லை. உலகக்கோப்பையில் இந்தியாவை நாங்கள் வீழ்த்தியுள்ளோம். விமர்சனங்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பகுதிதான்" என்று குறிப்பிட்டார்.
2021 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் முதன்முறையாக வீழ்த்தியதைச் சுட்டிக்காட்டி ஷதாப் கான் இவ்வாறு பேசினார். ஷாஹித் அப்ரிடி, முகமது யூசுப் போன்ற ஜாம்பவான்கள் ஷதாப் கானின் சமீபத்திய ஆட்டத்திறனை விமர்சித்த நிலையில், அவர் இவ்வாறு பதிலடி கொடுத்தார்.

முன்னாள் வீரர்களை இழிவுபடுத்தும் வகையில் ஷதாப் கான் பேசியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அணியின் மேலாளர் நவீத் சீமா மூலம் ஷதாப் கானுக்கு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியான தகவல்களின்படி, "செய்தியாளர் சந்திப்பில் ஷதாப் கான் தனது எல்லையை மீறிப் பேசிவிட்டார். அவரது மாமனார் சக்லைன் முஷ்டாக் உட்பட அனைத்து முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள். அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும். இதுபோன்ற தரம் தாழ்ந்த மொழியைப் பயன்படுத்தக் கூடாது" என்று ஷதாப் கானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஷதாப் கானின் மாமனாரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான சக்லைன் முஷ்டாக், ஷதாப் கானின் கருத்துக்குத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இது தேவையில்லாத கருத்து என்று குறிப்பிட்ட அவர், "நானும் ஐசிசி கோப்பையை வெல்லாதவர்களில் ஒருவன் தான், ஆனால் பாகிஸ்தான் அணிக்காகப் பல முக்கியமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நாங்கள் வெற்றியைத் தேடித்தந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர் கம்ரான் அக்மலும் ஷதாப் கானின் பேச்சு தேவையற்றது என்றும், மூத்த வீரர்களை விமர்சிக்கும்போது நிதானம் தேவை என்றும் கூறியுள்ளார்.
ஷதாப் கானின் இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, மற்ற பாகிஸ்தான் வீரர்களுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது போட்டியைப் பற்றி மட்டுமே கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி நிர்வாகம் தற்போது வீரர்களைச் செய்தியாளர்களிடம் பேச அனுமதிப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் உஸ்மான் தாரிக் செய்தியாளர் சந்திப்பிற்கு வந்தபோது, இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்த ஒரு கேள்விக்கு அவரைப் பதிலளிக்க விடாமல் ஊடக மேலாளர் தடுத்தது குறிப்பிடத்தக்கது.
நமீபியாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. சனிக்கிழமை நடைபெறவுள்ள தனது முதல் சூப்பர் 8 போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் பாகிஸ்தான் மோதவுள்ளது.