துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்ற நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரரான ஷாகின் அப்ரிடி 3 வார்த்தைகளில் இந்திய அணிக்கு வார்னிங் கொடுத்துள்ளார். 41 ஆண்டுகளில் முதல்முறையாக ஆசியக் கோப்பை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக ஷாகின் அப்ரிடி அமைந்தார். ஏனென்றால் 136 ரன்கள் என்ற எளிய இலக்கை வங்கதேச அணி விரட்டிய போது, முதல் ஓவரிலேயே விக்கெட்டை எடுத்து ஷாகின் அப்ரிடி அழுத்தத்தை கொடுத்தார்.

தொடர்ந்து ஹிர்டாய் மற்றும் ஷமீம் ஹொசைன் ஆகியோரின் விக்கெட்டுகளை ஷாகின் அப்ரிடி சரியான நேரத்தில் வீழ்த்தினார். சிறப்பாக பவுலிங் செய்த ஷாகின் அப்ரிடி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆட்டநாயகன் விருது ஷாகின் அப்ரிடிக்கு அளிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலமாக ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றது. 41 ஆண்டு கால ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணி நேருக்கு நேர் இறுதிப்போட்டியில் மோதிக் கொள்வது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கேற்ப பாகிஸ்தான் வீரர்கள் புதிய உத்வேகத்துடன் இருக்கின்றனர்.
இந்தப் போட்டிக்கு பின் ஷாகின் அப்ரிடி பேசுகையில், ஆட்டநாயகன் விருதை எனது மனைவி மற்றும் மகனுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப் போட்டியை காண்பதற்காக இருவரும் இந்த மைதானத்திற்கு நேரில் வந்துள்ளனர். பவர் பிளேவில் எனது முதல் 3 ஓவர்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்லோயர் பந்துகளை வீசுவதில் தீவிரமாக பணியாற்றி வருகிறேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டி தொடர்பான கேள்விக்கு, நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று 3 வார்த்தையில் பதில் அளித்துள்ளார். 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எந்தவொரு ஐசிசி தொடரின் இறுதிப்போட்டிகளிலும் மோதியதில்லை. இதனால் இந்திய அணி மீண்டும் வென்று சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு பழிதீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.